பட்ஜெட்டில் வரி விலக்கு: அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை
பட்ஜெட்டில் வரி விலக்கு: அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை
பட்ஜெட்டில் வரி விலக்கு: அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை

சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில், வரிகளை விலக்க வேண்டுமென, அரசுக்கு வணிகர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.
'சி' பாரம் இல்லாதவர்களுக்கும், உள்ளீட்டு வரியை திருப்பித் தர உத்தரவிட வேண்டுமென, அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் அசோசியேஷன் கோரிக்கை விடுத்தது. 'மெல்லும் புகையிலை பொருட்களைத் தவிர, மற்ற காம்பு புகையிலை பொருட்களான பீடி, சுருட்டு போன்றவற்றிற்கும் வரியை குறைக்க வேண்டும். வெளிமாநிலங்களிலிருந்து குறைந்த வரி செலுத்தி, கள்ள மார்க்கெட்டில் வாங்கும் புகையிலை பொருட்களை, சோதனைச் சாவடிகளில் தடுக்க வேண்டும். வாட் வரி பதிவு முறையை, வருமான வரித்துறை போன்று எளிதாக்க வேண்டும். சிறு வணிகர்களுக்கு, மின்சார மானியத்தை, 100 யூனிட்டிலிருந்து 300 யூனிட்டாக உயர்த்த வேண்டும்' என, தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மனுவில், 'வணிகர்களை பாதிக்கும் வகையில், அதிக அபராதம் விதிக்கும் தொழிலாளர் நலன் மற்றும் எடை அளவு சட்ட விதிகளை மாற்ற வேண்டும். கோல மாவு, குழந்தைகளுக்கான பொம்மைகள், சைக்கிள், ரெடிமேட் ஆடைகள், மாணவர் சீருடைகள் மீது வரி விலக்கு அளிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் பைகளுக்கு வரி விலக்கு அளிக்குமாறு, பை உற்பத்தியாளர்கள் நல சங்கம் வலியுறுத்தியது. வணிகர்களின் கருத்துக்களை பரிசீலித்து, பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.