ADDED : அக் 10, 2011 06:13 AM
திருச்சி:திருச்சி அருகே இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், மதுரை வந்த 'வைகை' எக்ஸ்பிரஸ் ரயில், மூன்று மணி நேரம் தாமதமாக கிளம்பியது. இன்று காலை மதுரையில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக சென்னைக்கு புறப்படும். சென்னையில் இருந்து நேற்று மதியம் கிளம்பிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி அருகே லால்குடி பகுதியில் வந்த போது, எதிர்பாராவிதமாக தண்டவாளத்தில் குறுக்கே சென்ற மாடு மீது மோதியது. இதில், ரயில் இன்ஜின் பகுதியில் மாடு சிக்கியதால், இன்ஜின் கோளாறு ஏற்பட்டு அங்கேயே நிறுத்தப்பட்டது. உடனடியாக திருச்சியில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டுச் செல்லப்பட்டது.
இதற்கிடையே, சிக்னலிலும் பழுது ஏற்பட்டது.சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொறியாளர்கள், சிக்னலை சரிசெய்தனர். மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டு, வைகை எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. இதனால், நேற்று மாலை 5.45 மணி முதல் இரவு 8.50 வரை நடுக்காட்டில் பயணிகள் தவித்தனர். ஒன்பது மணியளவில் திருச்சிக்கு வந்த வைகை எக்ஸ்பிரஸ், மூன்று மணி நேரம் தாமதமாக இரவு 12 மணிக்கு மேல் மதுரை வந்தது. இன்று காலை 6.45 மணிக்கு சென்னை செல்லவேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் 7.45 மணிக்கு கிளம்பி செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


