கிழக்கு சென்னை சாலை விபத்தில் இருவர் பலி
கிழக்கு சென்னை சாலை விபத்தில் இருவர் பலி
கிழக்கு சென்னை சாலை விபத்தில் இருவர் பலி
ADDED : செப் 17, 2011 01:00 AM
சென்னை: காமராஜர் சாலை, நீச்சல்குளம் எதிரில், வேனும், பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற இருவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் சக்திவேல்,40. மயிலாப்பூரை சேர்ந்த நாகராஜன் மகன் கண்ணன்,40. இருவரும், துக்க நிகழ்ச்சிக்கு சங்கு ஊதும் வேலை பார்த்து வந்தனர். நேற்று அதிகாலை, மீன் வாங்குவதற்காக காசிமேடு சென்றனர். பைக்கை சக்திவேல் ஓட்டிச் சென்றார். இருவரும், மீன் வாங்கிக் கொண்டு காலை 7.30 மணிக்கு, காமராஜர் சாலை வழியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஐஸ் ஹவுசில் இருந்து பூக்கடை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, நீச்சல் குளம் எதிரில், சக்திவேல் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே சக்திவேல் மற்றும் கண்ணன் ஆகியோர் உடல் நசுங்கி இறந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அவர்களின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் (பொறுப்பு) வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, வேன் டிரைவரான ராயப்பேட்டையைச் சேர்ந்த மோசின் மிர்ராவை கைது செய்தார்.