ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா தலைமறைவு
ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா தலைமறைவு
ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா தலைமறைவு
ADDED : ஜூலை 27, 2011 12:24 AM

புதுடில்லி : யோகா குரு ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். யோகா குரு ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணாவின் பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்களில், அவரது பெற்றோரின் தாயகம் இந்தியா என்றும் மற்றொரு சான்றிதழில், நேபாளம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, இவர் போலி ஆவணங்களை தாக்கல் செய்து, பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக, இவர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, இவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி, வெளியுறவு அமைச்சகத்திடம் சி.பி.ஐ., கோரியுள்ளது. அவரது குடியுரிமை குறித்து தற்போது, சி.பி.ஐ.,அதிகாரிகள் விசாரிக்கின்றனர். அவர் இந்தியாவை விட்டு தப்பி செல்லாதபடி விமான நிலையம், துறைமுகம், நாட்டின் எல்லை பகுதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இதற்கிடையே அவரை இரண்டு நாளாக காணவில்லை என, ஹரித்துவார் ஆஸ்ரம நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, பாலகிருஷ்ணாவின் பாதுகாவலர் ஜெயேந்திரசிங் குறிப்பிடுகையில், 'ஹரித்துவாரில் உள்ள திவ்ய யோக ஆஸ்ரமத்துக்கு சென்றவர் மீண்டும் தன்னுடைய இருப்பிடம் திரும்பவில்லை. அவருக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்' என்றார். அவரை காணவில்லை, என போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


