Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சமுதாய நலக்கூட திறப்பு விழாவில் கவுன்சிலர்கள் சாலை மறியல் முயற்சி : கடையத்தில் பரபரப்பு

சமுதாய நலக்கூட திறப்பு விழாவில் கவுன்சிலர்கள் சாலை மறியல் முயற்சி : கடையத்தில் பரபரப்பு

சமுதாய நலக்கூட திறப்பு விழாவில் கவுன்சிலர்கள் சாலை மறியல் முயற்சி : கடையத்தில் பரபரப்பு

சமுதாய நலக்கூட திறப்பு விழாவில் கவுன்சிலர்கள் சாலை மறியல் முயற்சி : கடையத்தில் பரபரப்பு

ADDED : ஜூலை 28, 2011 01:47 AM


Google News

ஆழ்வார்குறிச்சி : கடையம் யூனியனில் புதிய சமுதாய நலக்கூட திறப்பு விழா முறையாக தெரிவிக்காததை கண்டித்து ஒன்றிய கவுன்சிலர்கள் சாலை மறியல் செய்ய முயற்சித்ததால் கடையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.சேர்வைக்காரன்பட்டி பஞ்.,சிற்குட்பட்ட கடையம் யூனியன் அலுவலகத்திற்கு எதிர்புறம் ஒன்றிய பொது நிதியில் இருந்து பாரதியார் நினைவு சமுதாய நலக்கூட கட்டடம் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டடத்தை நேற்று காலை சேர்வைக்காரன்பட்டி பஞ்., தலைவர் வள்ளிசெல்வம் ரவிச்சந்திரன் தலைமையில் ஒன்றிய சேர்மன் செல்வி சங்குகிருஷ்ணன் திறந்து வைப்பதாகவும், ஒன்றிய துணைத் தலைவர் செய்யதலி பாத்திமா, ஒன்றிய குழு உறுப்பினர் சிவன்மாரி ஆகியோர் முன்னிலை வகிப்பதாகவும் மண்டபம் நுழைவு வாயிலில் கல்வெட்டு வைக்கப்பட்டிருந்தது.நேற்று காலை யூனியனில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நடந்தது.



கூட்டம் முடிந்த நிலையில் சேர்மன் செல்வி சங்குகிருஷ்ணன் எதிரேயுள்ள புதிய சமுதாய நலக்கூடத்திற்கு திறப்பு விழா நடத்த வேண்டுமெனவும், கவுன்சிலர்கள் அனைவரும் வருகைதர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஒன்றிய கவுன்சிலர் சிவன்மாரி உட்பட எந்த கவுன்சிலர்களுக்கும் திறப்பு விழா நடைபெறுவது தெரியாது, முறையான அழைப்பிதழ் தயாரிக்கவில்லை, சமுதாய நலக்கூடம் முன் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் எம்.பி,,ராமசுப்பு, எம்எல்ஏ பி.ஜி.ராஜேந்திரன் ஆகியோரது பெயர் இல்லாதது ஆகியவற்றை கண்டித்து வைஸ் சேர்மன் செய்யதலி பாத்திமா, ஒன்றிய கவுன்சிலர்கள் புளி கணேசன், சீனிவாசுகி அருணாசலம், செண்பகவல்லி, புவனேஸ்வரி, சிவன்மாரி, வன்னியநம்பி, டி.கே.பாண்டியன், கனகராஜ் ஆகிய 9 பேரும் புதிய கட்டட திறப்பு விழா நடத்தவிடக்கூடாது என கூறி கட்டடத்திற்குள் திறப்பு விழா நடத்த யாரையும் அனுமதிக்காமல் மறித்தனர்.



இந்நிலையில் கவுன்சிலர்களுக்கு ஆதரவாக கடையம் ஒன்றிய முன்னாள் சேர்மன் டி.பி.டி.பொன்னுதுரை, மாவட்ட தொலைபேசி ஆலோசனை குழு உறுப்பினர் அழகுதுரை, தெற்கு கடையம் பஞ்., முன்னாள் தலைவர் ராமதுரை, துப்பாக்குடி ஜெகநாதன், இளைஞர் காங்., தலைவர் பாரதிராஜன், கோவிந்தபேரி சுப்பையாபாண்டியன், திருமலையப்பபுரம் பலவேச மூப்பனார், அருணாசலம்பட்டி எஸ்.ஆர்.லிங்கம் ஆகியோர் சேர்ந்து கட்டட திறப்பு விழாவை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.மேலும் கல்வெட்டை அகற்றாவிட்டால் பஸ் மறியல் செய்வோம் என சுமார் 2 மணி நேரமாக சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



சம்பவ இடத்திற்கு வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், கடையம் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம், தனிப்பிரிவு பரமேஸ்வரன் உட்பட போலீசார் வரவழைக்கப்பட்டனர்.பிடிஓ சிவகாமசுந்தரி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இந்திரா, டி.கே.பாண்டியன், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம், கடையம் வருவாய் ஆய்வாளர் துரைராஜ், விஏஓக்கள் அருணாசலம், செல்லப்பா, கிராம காவலர் பிரம்மநாயகம், மற்றும் கட்சி பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் புதிதாக அமைக்கப்பட்ட கல்வெட்டு உடனடியாக பெயர்த்து எடுக்கப்பட்டு அப்புறப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us