ADDED : ஆக 07, 2011 01:46 AM
தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே இறந்தவர் கண்கள் தானமாக பெறப்பட்டது.
நல்லம்பள்ளியை அடுத்த ஜெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது தந்தை குப்பாகவுண்டர் (73). இவர் இயற்கை மரணம் அடைந்தார். இவரது கண்களை தானம் செய்ய கோவிந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இது குறித்து தர்மபுரி லயன்ஸ் சங்கத்துக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தனர். தகவல் அறிந்த டாக்டர் பினு மற்றும் லயன்ஸ் சங்க ரவி ஆகியோர் விரைந்து சென்று இறந்த குப்பாகவுண்டருக்கு மலர் அஞ்சலி செலுத்தி, அவரது இரு கண்களையும் ஆப்பரேஷன் மூலம் பெற்றனர். இரு கண்களும் பெங்களூரு லயன்ஸ் சங்க கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தர்மபுரி கண் தான மையத்தில் இது வரையில் 208 பேரின் கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளது.