ADDED : அக் 15, 2011 02:05 AM
கடலூர் : மின்கம்பத்தில் மின்ஒயரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின்துறை ஊழியர் மின்சாரம் தாக்கி இறந்தார்.
ரெட்டிச்சாவடி அடுத்த கிளிஞ்சிக்குப்பம், புதுபூஞ்சோலைகுப்பத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன், 45.
மஞ்சக்குப்பம் மின்துறை அலுவலகத்தில் 'ஒயர்மேன்' ஆக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, மங்கலட்சுமி, 33, என்ற மனைவியும், தீபா, 11, என்ற மகளும் உள்ளனர். நேற்று காலை செம்மண்டலம் அரசு பார்வையற்றோர் பள்ளி பின்புறம் உள்ள மின்கம்பத்தில் தியாகராஜன் ஏறி மின் ஒயரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, குறைந்த மின் அழுத்த பாதைக்குச் செல்லும் மின் ஒயரில் தியாகராஜனின் தலை உரசியதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்த ஊழியர்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


