பரம்பிக்குளம் நிரம்பியது உபரிநீர் வெளியேற்றம்
பரம்பிக்குளம் நிரம்பியது உபரிநீர் வெளியேற்றம்
பரம்பிக்குளம் நிரம்பியது உபரிநீர் வெளியேற்றம்
ADDED : ஆக 05, 2011 12:47 AM
பொள்ளாச்சி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் தொடர்மழையால், பரம்பிக்குளம் அணை நிரம்பியது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பி.ஏ.பி., திட்டத்தின், முக்கிய அணையான பரம்பிக்குளம் அணையின் 72 அடி உயரத்தில் நேற்று முன்தினம் 71.5 அடி நீர்மட்டம் இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால், நேற்று முன்தினம் இரவு 2.00 மணியளவில் 71.80 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. பரம்பிக்குளம் அணையின் துணை அணைகளான பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு அணைகளும் நிரம்பும் நிலையில் உள்ளன.
இதனால், பரம்பிக்குளம் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஸ்பில்வே மதகுகள் திறக்கப்பட்டன. அணையிலுள்ள மூன்று மதகுகளில் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
பரம்பிக்குளம் அணைக்கு 1,293 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது. அணையில் இருந்து 494 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தூணக்கடவு டனல் வழியாக வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. இந்நிலையில், பரம்பிக்குளம் அணையின் ஸ்பில்வே வழியாக வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேறியது.
சோலையாறு அணையில் 159.39 அடி நீர்மட்டம் (அணை உயரம் 160 அடி) உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,558 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது.சோலையாறு அணையில் இருந்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டத்தை 71.80 அடி என்ற அளவில் பராமரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பி.ஏ.பி., அதிகாரிகள் கூறுகையில், 'அணையின் பாதுகாப்பு கருதி, நீர்வரத்து முழுமையாக வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து குறைந்ததும், மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்படும்' என்றனர்.