சென்னைக்கு எரிசாராயம் கடத்திய 12 பேர் கைது
சென்னைக்கு எரிசாராயம் கடத்திய 12 பேர் கைது
சென்னைக்கு எரிசாராயம் கடத்திய 12 பேர் கைது
ADDED : ஆக 08, 2011 02:16 AM
சென்னை:புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு எரிசாராயம் கடத்தி வந்த 12 பேரை,
தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 ஆயிரத்து 890
லிட்டர் எரிசாராயம் மற்றும் நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.வெளி
மாநிலங்களில் இருந்து சென்னைக்கு லாரிகள் மூலம் எரிசாராயம் கடத்தி
வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏ.டி.ஜி.பி., காந்திராஜன்
மற்றும் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாஸ் ஆகியோர் உத்தரவின்
பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் துணை
கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், கடந்த 6ம் தேதி,
இரணியம்மன் கோவில் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது,
வேகமாக வந்த இரண்டு லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அதில், லாரியின் ரகசிய
அறையில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 252 பிளாஸ்டிக் கேன்களில், எட்டாயிரத்து
820 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது
தொடர்பாக, லாரியில் இருந்த புதுச்சேரி, முதலியார் பேட்டையைச் சேர்ந்த
முனுசாமி மகன் தங்கராஜ், 47, விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவைச்
சேர்ந்த சாமிநாதன் மகன் ஏழுமலை, 31 ஆகியோரிடம் விசாரணை
நடத்தப்பட்டது.இதில், தங்கராஜ் எரிசாராய வியாபாரி என்பதும், கடந்த 1991
முதல் 2005 வரை புதுச்சேரி டிரான்ஸ்போர்ட்டில் டிரைவாக பணியாற்றி வந்ததும்
தெரிய வந்தது. அதன் பின், வேலையை விட்டுவிட்டு, கடந்த ஆறு ஆண்டுகளாக வட
மாநிலங்களில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்து, புதுச்சேரி மற்றும் தமிழக
எல்லையில் இருந்து திண்டிவனம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய
பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கு சப்ளை செய்ததும் தெரியவந்தது.
மேலும், தங்கராஜ் மீது சென்னை, விழுப்புரம், புதுச்சேரி ஆகிய இடங்களில்
எரிசாராயம் கடத்தியது சம்பந்தமாக பல வழக்குகள் உள்ளன. மேலும், சென்னையில்
இவருக்கு பிடிவாரன்ட் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.மற்றொரு
நபரான ஏழுமலை, தங்கராஜிடம் பணிபுரியும் டிரைவர். பின், இருவரையும் போலீசார்
கைது செய்தனர். இதேபோல், திண்டிவனம் அருகே எரிசாராயம் கடத்தி வரப்பட்ட,
மேலும் இரண்டு லாரிகளை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இது தொடர்பாக 10 பேர்
கைது செய்யப்பட்டனர். இவற்றுடன் சேர்த்து மொத்தம் 13 ஆயிரத்து 890 லிட்டர்
எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது; நான்கு லாரிகள் பறிமுதல்
செய்யப்பட்டன. மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.


