
மதுரை : தெற்காசிய நாடுகளில் காணப்படும் தூக்கணாங்குருவி, தமிழகத்தின் செழிப்பு மிகுந்த பகுதிகளில் வசித்து வரும் ஒரு அதிசய பறவை.
செழிப்பான நீர்பகுதி, உயரமான பனை, தென்னை மரங்களில் கூடுகட்டி குடும்ப வாழ்க்கை நடத்தும் தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவி இனத்தைப் போன்று வேகமாக அழிந்து வரும் இனம்.
ஒரு கூடுகட்ட பொருட்களை சேகரிப்பதற்கு 500 முறை பறந்து செல்கிறது. 4 ஆயிரம் பதர்களால் கூட்டை முழுமை செய்கிறது. ஒரு கூடு கட்டுவதற்கு 18 நாட்கள். குடுவை போன்ற பகுதிக்கு 8 நாட்கள். ஆண்குருவிக்கு பெண் துணை உறுதியான பின் தான் கீழ்பகுதியில் உள்ள நீட்சியான பகுதியை ஆண்குருவி கட்டுகின்றது. கூடுகட்டி முடித்த பின் பெண் குருவியை அழைத்து வருகிறது. கூட்டின் உட்பகுதி பெண்குருவிக்கு பிடிக்கவில்லை எனில் சில வேளை வெளியேறும். அல்லது அது மாற்றியமைக்கும். பெண் குருவி 3 - 4 முட்டையிடும். 15 நாட்கள் அடைகாக்கிறது. இரவில் கூட்டில் ஈரமண் கொண்டுவந்து அதில் மின்மினிப்பூச்சியை பிடித்து அதில் பதித்து வைத்து ஒளிபெறும் ஆற்றல் கொண்டவை இவை. குஞ்சுகள் பறந்ததும், ஆண் குருவி புதிதாக அடுத்த வீடுகட்டத் துவங்கி விடுகிறது. இரண்டு கி.மீ., தூரத்திற்குள்ளாக இவை கூடுகளை மாற்றிவிடும்.
வைகை அணையில் இருந்து பேரணை வரையிலான பகுதியில் பெரியாறு அணையின் தண்ணீர் வளம் அதிகம் உள்ளது. இப்பகுதியில் ஆற்றோடு இணைந்து செல்லும் இணைப்பு கால்வாய் பகுதியில் உள்ள குறு மரங்களில் தூக்கணாங்குருவிகள் சிறகடித்துப் பறக்கின்றன. கிராமங்களில் பாசன வளம் குன்றியதால் நீரோடைகள் நாடிச் செல்லும் தூக்கணாங்குருவி இனம் இன்றும் பல காலம் வாழவேண்டுமெனில் நாம் பசுமையை பாதுகாப்பதும் அவசியம்.


