ADDED : ஜூலை 20, 2011 06:34 PM
புதுடில்லி :ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளியாக சோகைல் இந்துஸ்தானி கைது செய்யப்பட்டுள்ளார்.
பார்லிமென்டில் கடந்த 2008ம் ஆண்டு மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆதரவாக ஓட்டுப்போட பணம் கொடுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதனை டில்லி போலீசார் விசாரித்து வந்தனர். இந்த புகாரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமர்சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்சேனா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் புரோக்கராக செயல்பட்டதாக கருதப்படும் சோகைல் இந்துஸ்தானியை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 7 மணி நேர விசாரணைக்கு பின்னர் சோகைல் இந்துஸ்தானி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் போது இந்துஸ்தானி, தனக்கு அமர்சிங் , சோனியாவின் அரசியல் ஆலோசகர் அஹமது படேல் ஆகியோரிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது.பிரதமருக்கு நெருக்கமானவர்களிடமிருந்தும், சோனியாவின் இல்லத்திலிருந்தும் தொலைபேசி அழைப்பு வந்ததாக இந்துஸ்தான் விசாரணையின் போது கூறியதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.