ADDED : ஆக 03, 2011 09:33 PM
கவுகாத்தி: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓவியர் அபுராஜ் பரூவா, 12 மணி நேரத்தில், 67 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்ட, மிக நீளமான ஓவியத்தை வரைந்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த நீளமான ஓவியத்தில், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஜப்பான், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட, 40 நாடுகளைச் சேர்ந்த கிராமிய நடனக்காட்சிகள் இடம் பெற்றன. அசாமின் பாரம்பரிய கிராமிய நடனமான, பிகு நடனக் காட்சியும் ஓவியத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஓவியத்தின் மற்றொரு சிறப்பு, ஓவிய அட்டையில், கூர்மையான கத்தி, பிளேடு உள்ளிட்டவற்றைக் கொண்டு கீறியே வரையப்பட்டுள்ளது.