காரைக்கால்-நாகூர் ரயில் பாதையில் தண்டவாளம் சீரமைப்பு பணி துவக்கம்
காரைக்கால்-நாகூர் ரயில் பாதையில் தண்டவாளம் சீரமைப்பு பணி துவக்கம்
காரைக்கால்-நாகூர் ரயில் பாதையில் தண்டவாளம் சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : செப் 19, 2011 11:48 PM

காரைக்கால்: காரைக்கால்-நாகூர் புதிய அகல ரயில் பாதையில் பேக்கிங் மிஷின் மூலம் தண்டவாளங்களை சரியான மட்டத்தில் அமைக்கும் பணி, நேற்று நடந்தது. காரைக்கால்-நாகூர் இடையே புதிய அகல ரயில்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 2008ம் ஆண்டு துவக்கப்பட்ட இப்பணி, 97 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. 11 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தப் பாதையில், 37 சிறிய பாலங்களும், 7 பெரிய பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. ரயில் பாதையில் சாலை குறுக்கிடும் 11 இடங்களில் லெவல் கிராசிங் அமைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் கப்பல் துறைமுகத்தில் இருந்து நாகூர் இடையே சரக்கு ரயில் போக்குவரத்து, கடந்த ஆண்டு துவக்கப்பட்டது.
திருப்பட்டினத்தில் சிறிய ரயில் நிலையம், காரைக்காலில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிக்னல் பிரிவு, டிராபிக் துறைக்கென தனித்தனி அறைகள் கட்டப்பட்டுள்ளன. ரயில்களை சுத்தம் செய்ய, உயர் அழுத்த ஜெட் கிளினிங் பம்பு, ரயில் என்ஜின் டிரைவர்கள் ஓய்வு எடுக்க ரன்னிங் பங்களா, ரயில்வே அதிகாரிகளுக்கு 10 தங்கும் விடுதிகளும் நிலைய அலுவலகம் கட்டும் பணியும் நடந்து வருகிறது.
ரயில் பாதை அமைக்கும் பணி, 90 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், இறுதிக் கட்டமாக ரயில் தண்டவாளங்களை சரியான மட்டத்தில் பொருத்த அரக்கோணத்தில் இருந்து பேக்கிங் மிஷின், நேற்று காரைக்கால் வந்தது. இந்த இயந்திரத்தின் மூலம் தண்டவாளங்களை சரியான உயரத்தில் அமைத்தல், இரண்டு தண்டவாளங்களும் சம உயரத்தில் அமைத்தல் உள்ளிட்ட பணிகள், நேற்று மேற்கொள்ளப்பட்டன. மேலும், தண்டவாளங்கள் சிமென்ட் கட்டைகளுடன் இணைக்கும் பணி நடந்தது.


