ஒரு கோடி கைத்தறி சேலைகள் தேக்கம் : விசைத்தறியை ஊக்குவிக்கிறதா கோ-ஆப்டெக்ஸ்
ஒரு கோடி கைத்தறி சேலைகள் தேக்கம் : விசைத்தறியை ஊக்குவிக்கிறதா கோ-ஆப்டெக்ஸ்
ஒரு கோடி கைத்தறி சேலைகள் தேக்கம் : விசைத்தறியை ஊக்குவிக்கிறதா கோ-ஆப்டெக்ஸ்
ADDED : ஜூலை 24, 2011 11:33 PM

பரமக்குடி : கடந்த இரு மாதங்களாக, 'கோ-ஆப்டெக்ஸ்' கொள்முதல் செய்யாததால், பரமக்குடி கூட்டுறவு சங்கங்களில், ஒரு கோடிக்கும் அதிகமான கைத்தறி சேலைகள் தேக்கமடைந்துள்ளன.
கடந்த, ஜூன் 14 முதல் பரமக்குடியில் உள்ள எந்த கூட்டுறவு சங்கத்திலிருந்தும், கைத்தறி துணிகளை, கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் செய்யவில்லை. இதனால், ஒரு கோடிக்கும் அதிகமான சேலைகள் தேக்கமடைந்துள்ளன. வரவு இன்றி சங்கங்கள் கூலி வழங்கவில்லை. இதனால், நெசவாளர்கள் தத்தளிக்கின்றனர். ஏற்கனவே, பரமக்குடி கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியத்தொகை, 17 கோடி ரூபாய்க்கும் மேல் நிலுவையில் உள்ளது. காசுக்கடன் வட்டியை கூட செலுத்த முடியாமல் சங்கங்கள் தவிக்கின்றன. மேலும், தறி நெய்ய கச்சாப் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையில் கூட்டுறவு சங்கங்கள் சிரமத்தில் உள்ளன. இதற்கு, மத்தியில், கோ-ஆப்டெக்ஸ் விசைத்தறியை ஊக்குவிக்கும் வண்ணம் பல்வேறு ரகங்களை புகுத்தியுள்ளன. குறிப்பாக சேலைகள், பெட்ஷீட்கள், சுடிதார் மெட்டிரியல் உள்ளிட்டவைகள் அடங்கும். பி.எம்.எஸ்., (கைத்தறி) மாவட்ட செயலர் காசிவிஸ்வநாதன் கூறியதாவது: பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள், கூட்டுறவு சங்கங்களில் தேக்கமடைந்துள்ளன. கோ-ஆப்டெக்ஸ் தனக்குரிய ரகத்தை கொள்முதல் செய்யாதது கேலிக்கூத்தாக உள்ளது. கைத்தறிக்காக உருவாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ், இன்று, விசைத்தறியை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறது. ஜவுளிகளை கொள்முதல் செய்தால் தான், நெசவாளர்களுக்கு கூலி வழங்க முடியும். இல்லாத பட்சத்தில், கூட்டுறவு சங்கங்கள் மூடப்படும் அபாயநிலை உள்ளது. இவ்வாறு காசிவிஸ்வநாதன் கூறினார். கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் அமிர்தலிங்கம் கூறுகையில், ''தற்போது அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் நெய்யப்பட்ட கைத்தறி துணிகளை சென்னையில் உள்ள தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு சாம்பிள் அனுப்ப கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் தேர்வு செய்த ரகங்களை கொள்முதல் செய்ய உள்ளோம்'' என்றார்.


