தொடர் பண்டிகை விடுமுறை எதிரொலி: தென் மாவட்ட பஸ்கள் "ஹவுஸ்புல்'
தொடர் பண்டிகை விடுமுறை எதிரொலி: தென் மாவட்ட பஸ்கள் "ஹவுஸ்புல்'
தொடர் பண்டிகை விடுமுறை எதிரொலி: தென் மாவட்ட பஸ்கள் "ஹவுஸ்புல்'
ADDED : ஆக 30, 2011 12:28 AM
சேலம் : தொடர் பண்டிகை விடுமுறை எதிரொலியாக, தென் மாவட்டங்களுக்கு
இயக்கப்படும் ரயில்கள், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள், ஆம்னி
பஸ்களின் முன்பதிவுகளும் முடிந்து, பயணிகள் மிகுந்த ஏமாற்றம்
அடைந்துள்ளனர்.நாளை, ரம்ஜான் பண்டிகையும், செப்.
1 விநாயகர் சதுர்த்தி, அதை
தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என, பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு,
பள்ளிக் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாட, பள்ளிக் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி,
அரசு, தனியார் அலுவலக ஊழியர்களும், தங்களின் குழந்தைகளுடன் சொந்த
ஊர்களுக்குச் செல்ல துவங்கியுள்ளனர். சென்னை, சேலம், ஈரோடு ஆகிய நகரங்களில்
இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய, தென்
மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்
மற்றும் தனியார் ஆம்னி பஸ்களில், செப்., 7ம் தேதி வரை, முன்பதிவு அனைத்தும்
முடிவுக்கு வந்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில்,
சென்னையில் இருந்து இயக்கப்படும் பஸ்களில், ஒதுக்கீடு சீட்டுகள் அனைத்தும்,
ஆக. 20ல் முன்பதிவு செய்து முடிக்கப்பட்டு விட்டது; ஆம்னி பஸ்களின்
முன்பதிவும் முடிவுக்கு வந்துள்ளது. ரயில்களில், தத்கல் முறையில் முன்பதிவு
செய்தவர்களில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை, 200யை
தாண்டி உள்ளது. இதனால், முன்பதிவு செய்ய வரும் பயணிகள் ஏமாற்றத்துடன்
திரும்புகின்றனர். தொடர் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, பஸ்களில்
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது
குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில், எவ்வித அறிவிப்பும்
வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக, சென்னையில் மட்டுமின்றி தொழில் நகரங்களான
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் இருந்து பிற
மாவட்டங்களுக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள்,
மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து போக்குவரத்துக் கழக
அதிகாரி ஒருவர் கூறியதாவது: தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவு
போக்குவரத்துக் கழக பஸ்களில், அனைத்து முன்பதிவும் முடிந்து,
மறுமார்க்கத்தில், செப்., 6 வரை, அனைத்து பஸ்களின் முன்பதிவும் முடிவுக்கு
வந்துள்ளது. சிறப்பு பஸ்களை இயக்க, போதிய பஸ்கள் இல்லை. தற்போது
இயக்கப்பட்டு வரும் பஸ்களை இயக்கவே, நாங்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து
வருகிறோம். இருந்தபோதிலும், டயர் உள்ளிட்ட உதிரிபாகங்கள் பழுதடைந்த பஸ்களை
தயார்படுத்தி வருகிறோம். சென்னையிலிருந்து உத்தரவு வரும் பட்சத்தில்,
சிறப்பு பஸ்களை இயக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.


