ஏரி மீன் சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி, பேதி
ஏரி மீன் சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி, பேதி
ஏரி மீன் சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி, பேதி
ADDED : அக் 03, 2011 12:24 AM
அந்தியூர்:நகலூர் ஏரியில் மீன் பிடித்து சாப்பிட்ட 13 பேர், மூன்று நாட்களாக வாந்தி, பேதியால் கடும் அவதிப்படுகின்றனர்.அந்தியூர் யூனியன் நகலூர் ஊராட்சி, ஈச்சப்பாறை காட்டுக்குளம் ஏரியில், பல ஆண்டாக மீன் வளர்ப்பு மற்றும் விற்பனை நடக்கிறது. ஐந்தாண்டுக்கு ஒருமுறை மீன் பிடிக்க டெண்டர் விடப்படும் நிலையில், மலைக்கருப்புசாமி கோவில் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் டெண்டர் எடுத்துள்ளார். இன்னும் 10 நாட்களில் தங்கவேல் டெண்டர் தேதி முடிகிறது.காட்டுக்குளம் ஏரியில் நகலூர், மலைக்கருப்புசாமி கோவில், அந்தியூர், சந்தியபாளையம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த கும்பல், அத்துமீறி திருட்டுத்தனமாக மீன் பிடித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. மீன் பிடிக்கும் கும்பலை, தங்கவேலு அவ்வப்போது கண்டித்தார்.
செப்டம்பர் 29ம் தேதி, கரடிக்கல்லைச் சேர்ந்த ரோசம்மாள், 60, ஜெபமாலை மேரி, 50, பிரியா, 25, பழனிச்சாமி, 60, மங்கையர்கரசி, 15, லட்சுமி, 45, தேவி, 29, லூர்துமேரி, 40, துரைசாமி, 62, ராஜம்மாள், 42, ஆகிய 10 பேரும் ஏரியில் பிடித்த மீனை சாப்பிட்டனர்.
மீன் சாப்பிட்ட 10 மணி நேரத்துக்குப் பின், அனைவரும் வாந்தி, பேதி ஏற்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நேற்று காலை அனைவரும் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். தவிர, ஒரு வாரத்துக்கு முன், மீன் சாப்பிட்ட தவமணி, 45, குழந்தைசாமி, 38, தெரசம்மாள், 32 ஆகிய மூவரும் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.அனுமதிக்கப்பட்டவர்களை பரிசோதித்த டாக்டர் கவிதா, உணவு செரிமாணத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது என்றார். ஆர்.ஐ., ஜெயலட்சுமி, வி.ஏ.ஓ., சக்திவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர், சிகிச்சை பெற்றவர்களிடம் விசாரித்தனர்.ஏரியில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பதைத் தடுக்க, குருணை மருந்தை கலக்கியிருக்கலாம் என, அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.சுகாதாரத் துறை அதிகாரிகள், ஏரி தண்ணீர் மற்றும் அந்த ஊரின் குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி நீரையும் ஆய்வுக்கு அனுப்பினர். உடனடியாக குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது.


