ADDED : ஜூலை 27, 2011 03:22 AM
திருத்தணி : ஆடிக்கிருத்திகையையொட்டி, திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் இரவு,
முதல் நாள் தெப்பத் திருவிழா நடந்தது.தெப்பத் திருவிழாவை முன்னிட்டு,
மலைக்கோவிலில் இருந்து, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன்
மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்திற்கு எழுந்தருளினார். மாலை 6.30
மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், உற்சவர் வள்ளி, தெய்வானையுடன்
எழுந்தருளினார். முருகப் பெருமான் தெப்பத்தை, மூன்று முறை வலம் வந்து
பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு,
சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு, அருள்மொழி கார்த்திக்
குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இங்குள்ள திருமண மண்டபங்களில்,
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அன்னதானம், நீர்மோர் ஆகியவற்றை
வழங்கினர்.மாவட்ட எஸ்.பி., வனிதா தலைமையில், 2,000 போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டனர். பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த என்.சி.சி., என். எஸ்.
எஸ்., மாணவர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.