Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/பா.ஜ., கடல் முற்றுகைக்கு ஆதரவாக புதுகை மாவட்ட : விசைப்படகு மீனவர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்

பா.ஜ., கடல் முற்றுகைக்கு ஆதரவாக புதுகை மாவட்ட : விசைப்படகு மீனவர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்

பா.ஜ., கடல் முற்றுகைக்கு ஆதரவாக புதுகை மாவட்ட : விசைப்படகு மீனவர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்

பா.ஜ., கடல் முற்றுகைக்கு ஆதரவாக புதுகை மாவட்ட : விசைப்படகு மீனவர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்

ADDED : ஆக 07, 2011 01:52 AM


Google News
புதுக்கோட்டை: பாரதிய ஜனதா கட்சியின் கடல் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்றுமுதல் இரண்டு நாட்கள் மீன்பிடி தொழிலை புறக்கணித்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாப்பட்டிணத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லும் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனர்.

இதன்காரணமாக விசைப்படகு மீனவர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் இத்தகைய தொடர் தாக்குதல்களை கண்டித்தும், இதற்கு நிரந்தர தீர்வுகாணும் விதமாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் ராமேஸ்வரத்தில் இன்று(7ம் தேதி) காலை 10 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் அகில இந்தியத் தலைவர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான மீனவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மற்றும் மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளனர். இதற்காக அவர்கள் அனைவரும் வேன்களில் நேற்று மாலை முதலே ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றனர். இவர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் செல்வம் தலைமையில் நிர்வாகிகள் பலர் சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினருக்கு எதிரான கடல் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் அனைவரும் இரண்டு நாட்கள் (நேற்றும், இன்றும்) மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குள் செல்வதை புறக்கணித்துள்ளனர். இதன்காரணமாக மீனவர்கள் கூட்டத்தால் நிரம்பிவழியும் கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாப்பட்டிணம் மீன்பிடி துறைமுகப் பகுதிகள் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us