ADDED : செப் 25, 2011 05:48 AM
சென்னை:'புதிய பென்ஷன் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்றக் கூடாது' என்பதை வலியுறுத்தி, வரும் 26ம் தேதி கவர்னரிடம் மனு அளிக்க உள்ளதாக, புதிய பென்ஷன் மசோதா குழுவினர் அறிவித்துள்ளனர்.
புதிய பென்ஷன் மசோதா குழுவின் தலைவர் ராஜா ஸ்ரீதர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 2004ம் ஆண்டிற்குப் பின் பணியில் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, புதிய பென்ஷன் மசோதாவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, அரசு ஊழியர்களின் ஊதியம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, பங்குச் சந்தை லாபத்தைப் பொறுத்தே ஓய்வூதியம் கிடைக்கும். இந்த மசோதா பார்லிமென்டில் சட்டமாக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி, வரும் 26ம் தேதி, சைதாப்பேட்டையில் அனைத்துத் துறை அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளும் மாநில மாநாடும், பின் கவர்னரை சந்தித்து மனு அளிக்கவும் உள்ளோம். இவ்வாறு ராஜா ஸ்ரீதர் கூறினார்.புதிய பென்ஷன் மசோதா எதிர்ப்புக் குழுவின் அமைப்பாளர் துரைப்பாண்டியன், தென்னக ரயில்வே எம்பிளாய்ஸ் யூனியன் செயல் தலைவர் இளங்கோவன், தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்கள் சங்கப் பொருளாளர் சம்பத் உட்பட, பல்வேறு அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


