ADDED : ஆக 21, 2011 01:43 AM

பாலக்காடு : செம்பை வைத்தியநாத பாகவதரின் 115ம் ஆண்டு ஜெயந்தி விழா, பாலக்காட்டில் உள்ள கோட்டாயி செம்பை அக்ரஹாரத்தில் நேற்று துவங்கியது.
செம்பை வித்யா பீட செயலாளர் முருகன் வரவேற்றார்.
இசைக் கலைஞர் ராஜகுமாரன் உன்னி தலைமை வகித்தார். செம்பை இசை கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியன் துவக்கி வைத்து, பேசியது: கர்நாடக இசை மேதை செம்பை வைத்தியநாத பாகவதர், மாணவர்களிடையே அன்பும், அரவணைப்பும் கொண்டிருந்தவர். செம்பை இசைக் கல்லூரியில் உள்ள இவரது உருவச் சிலை மண்டபத்தை சீரமைத்து, கோயில் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவரது நினைவாக இந்தாண்டு முதல் எம்.ஏ.,(இசை) படிப்பு துவங்கப்பட்டுள்ளது. அரசு இக்கல்லூரியை விரிவுபடுத்தும் திட்ட பணிகளுக்காக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணத்தை புதிய கட்டடங்கள் அமைக்கவும், பாகவதரின் நினைவுகள் மக்களுக்கும், மாணவர்களுக்கும் சென்றடையும் விதத்திலும் செலவு செய்ய முயற்சி செய்வேன். இவ்வாறு, அவர் பேசினார். மாணவர்களின் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. செம்பை வித்யா பீடத்தின் 26வது ஆண்டு விழா இன்று நடக்கிறது.


