/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஆடி மாதத்தில் "வாடிப்போன' கொய்மலர் விவசாயிகள் :75 பைசாவுக்கு பூக்கள் கொள்முதல்ஆடி மாதத்தில் "வாடிப்போன' கொய்மலர் விவசாயிகள் :75 பைசாவுக்கு பூக்கள் கொள்முதல்
ஆடி மாதத்தில் "வாடிப்போன' கொய்மலர் விவசாயிகள் :75 பைசாவுக்கு பூக்கள் கொள்முதல்
ஆடி மாதத்தில் "வாடிப்போன' கொய்மலர் விவசாயிகள் :75 பைசாவுக்கு பூக்கள் கொள்முதல்
ஆடி மாதத்தில் "வாடிப்போன' கொய்மலர் விவசாயிகள் :75 பைசாவுக்கு பூக்கள் கொள்முதல்
ADDED : ஆக 03, 2011 01:08 AM
ஊட்டி : ஆடி மாதத்தில் முகூர்த்தம் இல்லாத காரணத்தை கூறி, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கொய்மலர் 75 பைசா முதல் 1 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் 'வாடிப்போய்' உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய விவசாய விளைபொருளான தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்ட பின்பு, விவசாயிகளை காப்பதற்காக, அ.தி. மு.க., அரசு மலர் சாகுபடியை அறிமுகப்படுத்தியது. தேயிலையுடன் ஊடுபயிராக மலர் சாகுபடியை மேற்கொள்ள மானியத்துடன் கடனுதவியும் வழங்கப்பட்டது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டனர். பசுமை குடில்களில் வளர்க்கப்படும் கார்னேஷன், ஜெர்பரா, லில்லியம் உட்பட பல்வேறு மலர்கள் தனியார் ஏஜென்டுகள் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு, பெங்களூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. விவசாயிகளிடம் 3 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை, தரத்தின் அடிப்படையில் வாங்கப்படும் மலர்கள் வியாபாரிகளின் மூலம் நகரப்பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிகபட்சம் 13 ரூபாய் வரை ஒரு மலர் (ஒரு ஸ்டெம்) கொள்முதல் செய்யப்பட்டது. அதன்பின், ஆடிமாதம் துவங்கியதால் தரமான மலரின் விலை 3 ரூபாய் முதல் 4 ரூபாய் வரையில் குறைந்து போனது. நீலகிரியில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் ஜெர்பெரா, கார்னேஷன் மலரின் விலை, ஆடி மாதத்தின் பெயரை கூறி தற்போது 'அடிமாட்டு' விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஜெர்பரா மலர்கள் 1 ரூபாய்க்கும், கார்னேஷன் மலர்கள் 50 முதல் 75 பைசாவுக்கும் கொள்முதல் செய்யப்படுவதால், தொழிலாளர்களுக்கான கூலி கொடுக்க கூட வழியில்லாத சூழ்நிலையில் மலர் உற்பத்தியாளர்கள் அவதிப்படுகின்றனர். முகூர்த்தம் இல்லாத காரணத்தால் தான் மலருக்கு கிராக்கி இல்லை என கூறப்பட்டாலும், வர்த்தக நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் மலர்களுக்கு விலை குறையவில்லை. இது குறித்து நீலகிரி மாவட்ட மலர் சாகுபடி சிறு விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் கூறுகையில்,''ஆடி மாதத்தை காரணம் காட்டி நாங்கள் உற்பத்தி செய்யும் ஜெர்பரா மலருக்கு 1 ரூபாயும், கார்னேஷன் மலருக்கு 75 பைசாவும் கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது. அதேவேளையில், வர்த்தகர்கள் இந்த மலர்களை கூடுதல் விலைக்கு தான் விற்பனை செய்து வருகின்றனர். ஆடி மாதம் முடிந்தால் மட்டுமே மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளது. இதனால், எங்களின் நிலை மிகவும் பாதிப்படைந்து உள்ளது. பூக்களை பறிக்கும் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க கூட பணம் இல்லாத நிலை உருவாகி உள்ளது. இதனால், பல பசுமை குடில்களில் பல்லாயிரம் மலர்கள் பறிக்கப்படாமல் அழுகி வருகின்றன,''என்றார்.


