அரசு பஸ்களில் இ-டிக்கெட் முன்பதிவு:முதல்வர் ஜெயலலிதா துவக்கினார்
அரசு பஸ்களில் இ-டிக்கெட் முன்பதிவு:முதல்வர் ஜெயலலிதா துவக்கினார்
அரசு பஸ்களில் இ-டிக்கெட் முன்பதிவு:முதல்வர் ஜெயலலிதா துவக்கினார்
UPDATED : அக் 04, 2011 05:17 PM
ADDED : அக் 04, 2011 12:20 AM
சென்னை:அரசு விரைவு பஸ்களில், கம்ப்யூட்டர் மூலம் முன்பதிவு செய்யும் வசதியான 'இ-டிக்கெட்' திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, தமிழக அரசு விரைவு பஸ்கள், மாநிலம் முழுவதும், ஆந்திரா, புதுச்சேரி, கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்களில் பயணிக்க, டிக்கெட் முன்பதிவு, கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்களில் மட்டுமே இருந்தது.ரயில், விமானத் துறைகளில் பயண டிக்கெட் பெற, 'இ-டிக்கெட்' மூலம் முன்பதிவு வசதி உள்ளது. இதுபோல், அரசு விரைவு பஸ்களிலும், கம்ப்யூட்டர் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாக, பயணிகள், 30 நாட்களுக்கு முன்பாக, தங்களது டிக்கெட்களை 'இ-டிக்கெட்' மூலம், முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், மொபைல்போன் மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.தற்போது செயல்பட்டு வரும், 50 முன்பதிவு மையங்களுடன், கூடுதலாகப் புதிய முகவர்களை நியமித்து, 300 முன்பதிவு மையங்களாக அதிகரிக்கப்படவுள்ளது. இந்த அங்கீகரிக்கப்படவுள்ள முன்பதிவு மையங்களுக்கு, நேரடியாகச் சென்றும் இணையதள வசதியுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணிகள் இ-டிக்கெட் பரிவர்த்தனை முடிந்ததும், அவரது மொபைல்போனுக்கு பணப் பரிவர்த்தனை குறித்த எஸ்.எம்.எஸ்., அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை, முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்து, நான்கு பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட இ-டிக்கெட்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர், போக்குவரத்து முதன்மைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


