Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

PUBLISHED ON : செப் 14, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

வெட்கமற்ற பணம் பிடுங்கிகள்!



க.கேசவன், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: ஊழலுக்கு எதிராக, இரண்டாவது சுதந்திர போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரேவை, மத்திய அரசு கைது செய்து, பின், விடுதலை செய்தது, வன்மையாக கண்டிக்கத் தக்கது.ஜனநாயக நாட்டில், ஜாதி, மதம், திருட்டு, கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டோருக்கெல்லாம், மக்களிடம் பணத்திற்கு ஓட்டுகளை பெற்று, எம்.எல்.ஏ.,வாகவோ, எம்.பி.,யாகவோ மாறி, பார்லிமென்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கும்போது, மக்கள் பிரதிநிதிகள் ஏன் கருத்து சொல்லக் கூடாது; அவர்கள் கூறும், ஜன் லோக்பால் மசோதாவையும் ஆதரிக்கக் கூடாது?

இதற்குத்தான், காந்திஜி போன்ற தலைவர்கள், ஆங்கிலேயரிடமிருந்து நாட்டை கைப்பற்றினார்களா? இதற்குத் தான் ஜனநாயகம் என்று பெயரா? அன்று வெள்ளையர்களின் துப்பாக்கி தோட்டாக்களுக்கும், அடி, தடிக்கும் மிரண்டு போய், வீட்டில் தூங்கியிருந்தால், இன்று, மக்களின் வரிப்பணத்தை, அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும் எளிதாக சுரண்ட முடியுமா?



நம் சுதந்திர இந்தியாவின், 65ம் ஆண்டு சுதந்திர தின விழாவில், இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார மேதையான, நம் பிரதமர் உரையாற்றும் போது, அதிகாரிகளின் பாக்கெட்டிற்கு, மக்களின் வரிப்பணம் செல்வதை தடுப்பதாகவும், நம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் பெரிய தடைக்கல்லாக இருப்பதாகவும் கவலைப்படுகிறார்.

புற்றுநோய் போல் ஊழல் பரவுவதாகவும், அடியோடு ஒழித்துக்கட்ட மக்கள் முன் வரவேண்டும் என்றும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இவர்கள் சொல்வதைப் பார்க்கும்போது, கடுமையான ஜன் லோக்பால் மசோதாவை உருவாக்க வேண்டுமென்ற அடிப்படை கருத்தை வலியுறுத்துவதாகத்தான் தெரிகிறது. பின், ஏன் கடுமையான லோக்பால் மசோதாவை உருவாக்க மட்டும் முன் வருவதில்லை?

தற்போது, ஊழல் செய்பவர்களுக்கு எதிராக ஒருபுறம் மக்கள் போராடினாலும், மறுபுறம் பணம் பிடுங்கிகள் வெட்கமில்லாமல், பணத்தை பிடுங்கி பிழைப்பு நடத்துகின்றனர். எனவே, அரசியல்வாதிகள், ஊழல்வாதிகளை ஒடுக்க முன்வராவிட்டாலும், ஊழலை ஒழிக்க போராடுபவர்களை ஒடுக்காமல், ஒத்துழைப்பு தரவேண்டும்.அப்போதுதான், அதிகாரிகளின் பாக்கெட்டிற்கு, மக்களின் வரிப்பணம் செல்லாமல், புற்றுநோயைப் போல் பரவும் ஊழலை அடியோடு ஒழித்துக் கட்டுவது சாத்தியம். இல்லையெனில், அது வெறும் மேடைப் பேச்சுக்கு மட்டுமே சாத்தியம்.



எங்களையும்கவனியுங்கள்!



எச்.ஏகாம்பரம் செ.மா. போ., (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'அபராதம்! மக்களுக்கு அரசு சேவை யை வழங்குவதில் தாமதப்படுத்தினால்...' என்ற செய்தி கண்டேன். நல்ல சட்டம்; ஆனால், 'சட்டங்கள் நிறைய இருக்கின்றன; நியாயங்கள் குறைவு' என்ற பழமொழி போல வே, நடைமுறையில் உள்ளது. உதாரணமாக, தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு, செப்., 2010 ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டது. ஓய்வு பெற்றவர்களுக்கும், ஓய்வூதியம் - பஞ்சப்படி மாற்றம் அறிவிக்கப்பட்டிருந்தது.அனைத்து போக்குவரத்துக் கழக பஸ்களிலும், துணையுடன் இலவசமாகச் செல்ல, அனுமதிக்கும் சட்டமும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால், பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன் கிட்டியது. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, ஒப்பந்த பயன் ஓராண்டை கடந்தும் கிடைக்கவில்லை.



ஓய்வூதியர்களுக்கான சங்கங்கள், சந்தா மட்டும் பெற்றுக் கொள்கின்றனர். பலமுறை போக்குவரத்துத் துறை செயலர், அமைச்சருக்கும், தமிழக முதல்வருக்கும், விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு விட்டன. இதுவரை, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, ஒப்பந்தப் பயன் தரப்படவில்லை. இது குறித்து அளிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு ஒரே பதில், 'பரிசீலனையில் உள்ளது' என்பது மட்டுமே.'அநீதிக்கு ஆட்படுவதை விட, அநீதி இழைப் பது அதிகக் கேவலமானது' என, அண்ணாதுரை கூறியுள்ளார். ஒரு வேளை, இது இன்றைக் குப் பொருந்தாது போலும்!



அப்பாவிகள்செத்தால் என்ன?

சியாமளா ரங்கநாதன், மந்தைவெளி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'டில்லி குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு கோழைத்தனமான செயல்' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார். சுதந்திர தினத்தன்று, கூண்டுக்குள் இருந்து கொடியேற்றி விட்டு, 'ஊழலை ஒழிப்போம்' என பேசி, தன் வரையில் இதுவே ஒரு பெரிய நடவடிக்கை என்பது போல் சொல்லி இருக்கிறார்.

'பயங்கரவாதத்திற்கு, ஒரு போதும் பணியமாட்டோம், துணை போக மாட்டோம்' என சிதம்பரம் பகட்டாக பேசுகிறார். காயம்பட்டவர்களுக்கு உதவியும், இழப்பீடும் தந்துவிட்டால், தங்கள் கடமை முடிந்தது என நினைக்கிறார். 'தலை வலியும், திருகு வலியும், தனக்கு வந்தால் தெரியும்' என்பதற்கேற்ப, 'அடுத்தவர்கள் பாதிக்கப்பட்டால், நமக்கென்ன' என, அரசு நினைக்கிறது.



மிகக் கொடூரமாக திட்டமிட்டு, நாட்டின் பிரதமரையே கொன்று குவித்த குற்றவாளிகளுக்கே இரக்கம் காட்டும் அளவிற்கு, மனிதாபிமானம் உள்ளவர்களாயிற்றே நம் அரசியல்வாதிகள்!அப்சல்குருவிற்கே ஆதரவளிக்கும் நம் ஜனநாயகம், எத்தனை தாக்குதல் நடந்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் இரக்க குணத்துடன் இயங்கும்.நாட்டில் குற்றவாளிகளும், பயங்கரவாதிகளும் கொடுத்து வைத்தவர்கள். அப்பாவி மக்கள் கொத்து, கொத்தாக செத்தால் அவர்களுக்கென்ன கவலை?வாழ்க பாரதம்!



நல்ல முடிவுவரவேற்போம்!

க.ஸ்ரீதரன், கல்லிடைக்குறிச்சியிலிருந்து எழுதுகிறார்: 'தமிழகத்தில், சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம் போன்ற நாட்களில் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது' என்ற தமிழக அரசின் முடிவு, வரவேற்கக் கூடியது. பெரும்பாலான தமிழக மக்களின் நெஞ்சில், தேன் வந்து பாய்ந்துள்ளது.அரசுக்கு பெரும்பான்மை நிதி ஆதாரம், மதுக்கடைகளால் தான் என்றாலும், இந்தியா குடியுரிமை பெற்ற தினத்திலும், சுதந்திர இந்தியாவிலும், தொழிலாளர் தினத்திலும் இந்த மதுக்கடைகள் திறக்கத் தான் வேண்டுமா என்பது, பலரின் கருத்து.இந்த குறிப்பிட்ட மூன்று நாட்களில், குடும்பத்துடன், 'குடி'மகன் வாழ்வதற்கு ஒரு வழி பிறக்கும்; தாய்மார்களுக்கும் மகிழ்ச்சி தரும்.



அதே சமயம் பார்களிலும், தனியார்கள் மூலம் கள்ள விற்பனை படு ஜோராக நடைபெறும். அதற்கு காவல்துறையில் உள்ள சிலர் துணை இருப்பர். இதில், அரசின் தனி கவனம் தேவை. 80 ரூபாய் பாட்டில், 150 ரூபாய்க்கு விற்கப்படும். எதற்காக கடைகள் கூடாது என, அரசு அறிவித்ததோ, அது பலன் இல்லாமல் போய்விடும்.இந்த தினங்களில், 'குடி'மகன்களால், குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அன்று, வழக்கு, வாய்தா ஏற்படும். சட்டம் போட்டால் மட்டும் போதாது, அந்த சட்டம் வலிமையானதாக இருக்க வேண்டும். ஏனென்றால், எந்த சட்டத்தையும் பெரும்பாலானோர் மதிப்பதில்லை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us