Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடியில் பயிர் மற்றும் காய்கறி மேம்பாட்டு திட்டத்திற்கு 16 கிராமங்கள் தேர்வு

தூத்துக்குடியில் பயிர் மற்றும் காய்கறி மேம்பாட்டு திட்டத்திற்கு 16 கிராமங்கள் தேர்வு

தூத்துக்குடியில் பயிர் மற்றும் காய்கறி மேம்பாட்டு திட்டத்திற்கு 16 கிராமங்கள் தேர்வு

தூத்துக்குடியில் பயிர் மற்றும் காய்கறி மேம்பாட்டு திட்டத்திற்கு 16 கிராமங்கள் தேர்வு

ADDED : ஆக 13, 2011 12:48 AM


Google News
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8 கிராமங்களும், பழம் மற்றும் காய்கறி திட்டத்தின் கீழ் 10 கிராமங்களும் மத்திய அரசின் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மதுரை மண்டல அளவில் தூத்துக்குடியில் நடந்த புள்ளியியல் துறை கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறை சார்பில் மதுரை மண்டல அளவிலான புத்தூட்ட பயிற்சி தூத்துக்குடியில் நடந்தது. பயிற்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி அமிர்தஜோதி தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார்.புள்ளியல் துறை இணை இயக்குநர் நவநீதம் விளக்கவுரையாற்றினார். தலைமை வகித்தார். மதுரை மண்டல துணை இயக்குநர் சின்னமாரி, தூத்துக்குடி புள்ளியல்துறை உதவி இயக்குநர் முருகன், புள்ளியல் அலுவலர் சண்முகம், என்.எஸ்.எஸ்.ஓ கண்காணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் புள்ளியல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் வருமாறு; ஒவ்வொரு பசலி ஆண்டின் தொடக்கத்திலும் மத்திய அரசின் நூறு சதவீதம் உதவி பெறும் திட்டங்களான (ஐ.சி.எஸ், டி.ஆர்.எஸ், வி) ஆகிய வேளாண் திட்டங்களுக்கு புள்ளி விபரங்களை சேகரிப்பதற்கு களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு புத்தூட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.பயிர் மேம்பாட்டு திட்டத்தை பொறுத்தமட்டில் 1973-74ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களின் மூலமாக வேளாண்மை புள்ளி விபரங்களை சேகரித்தலில் ஏற்படும் இடர்பாடுகளை கண்டறிந்து அவற்றை களைய வழிவகை ஏற்படுத்தி புள்ளி விபரங்களின் தரத்தை உயர்த்துவதாகும்.வி.ஏ.ஓக்களால் களி, ராபி மற்றும் கோடை ஆகிய பருவங்களில் பயிர் பரப்பளவு சரியான முறையில் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்டறிதல், வி.ஏ.ஓக்களால் பேணப்படும் அடங்கலில் கிராமத்திற்கான பயிர் பரப்பின் கூட்டுத் தொகை சரியான முறையில் கணக்கிடப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அரசினால் வரையறுக்கப்பட்டுள்ள விதி முறைகளின்படி பயிர் அறுவடை பரிசோதனை பணிகள் களப்பணியாளர்களால் நடத்தப்படுகின்றனவா என்பதை சரிபார்ப்பதாகும்.மூன்று பருவங்களிலும் பயிர் பரப்பு விபரங்கள் பதிவு செய்தல் மற்றும் பதிவேடுகளை பராமரித்தல் ஏற்படும் இடர்பாடுகளை கண்டறிந்து அதனை செயல்படுத்த இந்த விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.இதே போல் டி.ஆர்.எஸ் திட்டம் 1972-73ம் ஆண்டு முதல் தமிழகத்தில் வேளாண் புள்ளி விபரங்களை சேகரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு பசலி ஆண்டிலும் மொத்த வருவாய் கிராமங்களில் 20 சதவீத கிராமங்களில் 9 முக்கிய பயிர்களான நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, பருத்தி, நிலக்கடலை, கரும்பு, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு உரிய காலத்தில் கார், ராபி, கோடை ஆகிய மூன்று பருவங்களிலும் பயிர் பரப்பு விபரங்களை மதிப்பிடுதலுக்கும் அதன் அடிப்படையில் திட்டமிடுதலுக்கும் இந்த விபரங்கள் வி.ஏ.ஓக்கள் மூலம் வட்டார புள்ளியியல் ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்டு நுண்ணாய்வு செய்து படிவங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.பழம் மற்றும் காய்கறித்திட்டம் மத்திய அரசின் இதர வேளாண் திட்டங்களுடன் 1982-83ம் ஆண்டு முதல் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் கீழ் மா, பலா, வாழை, கொய்யா, எலுமிச்சை, திராட்டை மற்றும் அண்ணாச்சி போன்ற பழவகைகளும், தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், முட்டைக்கோஸ் மற்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற காய்கறி வகைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.இந்த திட்டத்தின் வாயிலாக சேகரிக்கப்படும் புள்ளி விபரங்கள் பழம் மற்றும் காய்கறிகளின் விளைச்சல் விபரங்களை மதிப்பீடு செய்ய உதவுகிறது. மதுரை மண்டலத்தை சார்ந்த பத்து மாவட்டங்களுக்கு நடப்பு பசலி ஆண்டில் பயிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 69 கிராமங்களும், டி.ஆர்.எஸ் திட்டத்தின் கீழ் 923 கிராமங்களும் பழம் மற்றும் காய்கறி திட்டத்தின் கீழ் 106 கிராமங்களும் தேர்வு செய்யப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8 கிராமங்களும், டி.ஆர்.எஸ் திட்டத்தின் கீழ் 97 கிராமங்களும் பழம் மற்றுமு காய்கறி திட்டத்தின் கீழ் 10 கிராமங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மதுரை மண்டல அளவில் நடந்த கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பத்து மாவட்டங்களின் கோட்ட புள்ளியியல் அலுவலர்கள், புள்ளியியல் ஆய்வாளர்கள், புள்ளியியல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us