காந்தி சமாதியில் உண்ணாவிரதம் இருந்த ராவ் பாதியில் வாபஸ் : தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் இழுபறி
காந்தி சமாதியில் உண்ணாவிரதம் இருந்த ராவ் பாதியில் வாபஸ் : தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் இழுபறி
காந்தி சமாதியில் உண்ணாவிரதம் இருந்த ராவ் பாதியில் வாபஸ் : தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் இழுபறி

புதுடில்லி : தனித் தெலுங்கானா கோரிக்கையை வற்புறுத்தி, டில்லி காந்தி சமாதியில் நேற்று உண்ணாவிரதம் இருந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், பாதியில் வாபஸ் பெற்றார்.
இந்நிலையில், தனித் தெலுங்கானாவை அமைக்கும் வரை தொடர் போராட்டம் நடத்த, தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு முடிவு செய்தது. இதையடுத்து, கடந்த மாதம் 13ம் தேதியிலிருந்து சாலை மறியல், கடையடைப்பு, ரயில் மறியல், பள்ளி, அலுவலகங்களை மூடல் போன்ற தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், தெலுங்கானா பகுதியில் சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வாபஸ்: தனித் தெலுங்கானாவை வற்புறுத்தி வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், காந்தி ஜெயந்தியையொட்டி, டில்லியில் உள்ள காந்தி சமாதியில் நேற்று உண்ணாவிரதம் இருந்தார். இதில், தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவினரும் கலந்து கொண்டனர். காந்தி சமாதியில் உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதியில்லை. எனவே, இவர்கள் இரண்டு மணி நேரம் மவுனவிரதமும் இருந்துவிட்டு, போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இக்குழுவினர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார்கள்? இது குறித்து சந்திரசேகர ராவ் கூறியதாவது: தனித் தெலுங்கானாவை உருவாக்குவதாக, பிரதமர் மன்மோகன் சிங் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்காக ஏராளமான மக்கள், உயிர் தியாகம் செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்னதாகவே தெலுங்கானா மாநிலம் இருந்துள்ளது. எனவே, தனி தெலுங்கானாவை தவிர்த்து எந்த ஒரு சமரசத்துக்கும் இடமில்லை. எங்களது போராட்டத்தை வன்முறையாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால், நாங்கள் அமைதியான வழியில் தான் போராட்டம் நடத்தி வருகிறோம். தெலுங்கானா விவகாரம் சிக்கலான விஷயம் என, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜியும், குலாம்நபி ஆசாத்தும் கூறுகின்றனர். அவர்கள் குழப்பமடைந்துள்ளனர்; தெளிவாக இல்லை. எவ்வளவு காலம் தான் விவாதிப்பார்கள்? பேச்சு நடத்துவார்கள்; எத்தனை கமிட்டி அமைப்பார்கள்; எத்தனைக் காலம் தான் எங்களை ஏமாற்றுவார்கள். இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.
இவரது மகன் ராமராவ் கூறியதாவது: தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்க நாங்கள் அளித்த கெடு முடிந்ததால் தான் இந்த போராட்டம் நடக்கிறது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, எங்களின் கோரிக்கையை ஏற்கிறது. எனவே, மீண்டும் பேச்சுவார்த்தை தேவையில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மனதளவில் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. அதனால் தான் இழுத்தடிக்கிறார்கள். தனித் தெலுங்கானா மசோதாவை நிறைவேற்ற குறைந்தபட்ச ஆதரவு இருந்தாலே போதுமானது. ஆளும் கட்சி வரிசையில் காங்கிரஸ் மெஜாரிட்டியாக உள்ளது. எதிர்க்கட்சியினரும் இந்த கோரிக்கையை ஆதரிக்கின்றனர். எனவே, தனித் தெலுங்கானா மசோதாவை எளிதில் நிறைவேற்ற முடியும். தனித் தெலுங்கானா போராட்டத்தால் கடந்த மூன்று வாரங்களாக ஆந்திர மாநிலமே ஸ்தம்பித்துள்ளது. ஆனால், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி தெரிவிக்கிறார். நிலைமையை திரித்துக் கூறுவதால், நாங்கள் பிரதமரை சந்தித்து உண்மை நிலையை கூற இருக்கிறோம்.இவ்வாறு ராமராவ் கூறினார்.
பல முறை பேச வேண்டும் குலாம் நபி ஆசாத் கருத்து
தெலுங்கானா நிலைமை குறித்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி விவகாரத்தை கவனிக்கும் குலாம் நபி ஆசாத்தும் நேற்று முன்தினம் கூடி விவாதித்தனர். இதற்கிடையே பிரகாசம் மாவட்டத்தில், மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் குறிப்பிடுகையில், 'ஆந்திராவின் தற்போதைய நிலைமை எங்களுக்கு நன்றாகவே தெரியும். தெலுங்கானா விவகாரத்தை தீர்க்க இன்னும் பல சுற்று பேச வேண்டியிருக்கிறது. அடுத்த பேச்சுவார்த்தை எப்போது என்பதை இப்போது கூற முடியாது. தெலுங்கானா பிரச்னையை விரைவில் தீர்ப்போம். தெலுங்கானா பகுதியில் நடக்கும் தொடர் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும்' என்றார்.


