Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழக பட்ஜெட்டில் புது வரிகள் இருக்காது?

தமிழக பட்ஜெட்டில் புது வரிகள் இருக்காது?

தமிழக பட்ஜெட்டில் புது வரிகள் இருக்காது?

தமிழக பட்ஜெட்டில் புது வரிகள் இருக்காது?

UPDATED : ஜூலை 28, 2011 08:49 AMADDED : ஜூலை 26, 2011 11:45 PM


Google News
Latest Tamil News
தமிழக அரசுக்கு 5,600 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்துக்கு வழி காணப்பட்டுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அமைய உள்ளது.புதிய அரசு பொறுப்பேற்ற பின், இந்த நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 4ம் தேதி காலை தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதற்காக, இம்மாத துவக்கத்தில் இருந்து தினமும், துறை வாரியான ஆய்வுக் கூட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நடத்தினார். இக்கூட்டங்கள், கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தன.

இக்கூட்டங்களில், துறைகளது செயல்பாடு, ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்கள், புதிய திட்டங்கள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் ஒரு மணி நேரமாவது ஒதுக்கி, ஆய்வு செய்யப்பட்டது.

இதனால், அடுத்த பத்து நாட்களில் பட்ஜெட் தயாரிப்பு பணி தீவிரமாக நடக்க உள்ளது. பட்ஜெட் வெளியாவதற்கு முன்பே, மதுபானங்கள் மீதானஆயத்தீர்வை மற்றும் சிறப்புக் கட்டணங்களை உயர்த்தி, 1,400 ரூபாய் கூடுதல் வருமானத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளது. இதேபோல, பல்வேறு பொருட்கள் மீதான, 'வாட்' மற்றும் விற்பனை வரி உயர்த்தப்பட்டு, 3,900 கோடி ரூபாய் கூடுதல் வருமானத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.



மேலும், பத்திரப்பதிவு கட்டணங்களை உயர்த்தியன் மூலம், கூடுதலாக 300 கோடி ரூபாய் வருமானத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, கூடுதல் வருமானத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளதால், பட்ஜெட் உரையில் புதிய வரி விதிப்புகள் ஏதும் இருக்காது என்று நம்பப்படுகிறது.அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இலவச கால்நடைகள், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் லேப்-டாப்கள் போன்ற திட்டங்களை, செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்தும் வகையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகள், பட்ஜெட்டில் செய்யப்படும். அரசு கேபிள் கார்ப்பரேஷன் மூலம், எவ்வாறு கேபிள் இணைப்புகள் மாற்றப்பட உள்ளன என்பதற்கான அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெற உள்ளது.



அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இலவச அரிசி, தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்கள் ஏற்கனவே துவக்கப்பட்டுள்ளன. எனவே, மீதமுள்ள அறிவிப்புகளை நிறைவேற்றும் அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற உள்ளன.எனவே, பட்ஜெட்டில் மக்களுக்கு பயனளிக்கும் விஷயங்களே அதிகம் இருக்கும் என்று உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த பட்ஜெட்டில், ஆசிரியர்கள் நியமிக்கப்படும் விதம் பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.-நமது சிறப்பு நிருபர்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us