Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தேர்தல் தோல்விக்கு நானே காரணம்: கருணாநிதி பேட்டி

தேர்தல் தோல்விக்கு நானே காரணம்: கருணாநிதி பேட்டி

தேர்தல் தோல்விக்கு நானே காரணம்: கருணாநிதி பேட்டி

தேர்தல் தோல்விக்கு நானே காரணம்: கருணாநிதி பேட்டி

UPDATED : ஜூலை 24, 2011 10:16 PMADDED : ஜூலை 24, 2011 08:53 PM


Google News
Latest Tamil News

கோவை:''தேர்தல் தோல்விக்கு நானே காரணம்,'' என்று பொதுக்குழு முடிவில், செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.



கோவையில், நடந்த தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், 2,050 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில், 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழு முடிவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:காங்கிரஸ் கூட்டணி உள்ளது உள்ளபடியே தொடரும். மத்திய அமைச்சரவையில் இரண்டு பதவிகள் காலியாக உள்ளன; அவை தி.மு.க.,வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை நிரப்பும்படியும் பிரதமர் மன்மோகன் கேட்டுக்கொண்டார். ஆனால், அந்த காலியிடம் அப்படியே தான் இருக்கும். அவற்றை நிரப்ப தி.மு.க., முனையாது; ஆனாலும், கூட்டணி தொடரும். இது குறித்து, நானும், பொதுச்செயலர் அன்பழகனும், எம்.பி.,க்களிடம் பேசி எடுத்த முடிவு இது.காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி எதுவும் இல்லை. அதிருப்தி இருப்பதாக சிலர் கூட்டம் போட்டு பேசி வருகின்றனர். அவர்கள் குறித்தும் பொதுக்குழு கூட்டத்தில் பேசப்பட்டது.



ஒட்டு மொத்த சி.பி.ஐ.,யை நான் குறை கூறவில்லை. அதிலுள்ள அதிகாரிகள் சிலர், உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள் என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்.தி.மு.க., தலைமையை மாற்றுவது என்பது எளிதல்ல. மீடியாக்கள் தான் தி.மு.க., தலைமை எப்போது மாறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. தி.மு.க., தலைமை, சட்டதிட்டத்தின்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுகிறது; இஷ்டத்துக்கு மாற்ற முடியாது. கீழ்மட்ட பொறுப்பிலும் இப்போது எந்த மாற்றமும் இருக்காது.



இந்த கூட்டத்தில் அழகிரி நேற்றும் பங்கேற்றார்; இன்றும் பங்கேற்றார். அவர், கூட்டத்தை புறக்கணிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது.தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் மற்றும் பா.ம.க., மாறி மாறி கருத்து தெரிவித்து வருவதாக கேட்கின்றனர். தேர்தல் தோல்விக்கு நானே காரணம் என்று பொதுக்குழுவில் கூட தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு, கருணாநிதி தெரிவித்தார்.



முன்னதாக, பொதுக்குழுவில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசுகையில், ''தலைமை மாற்றம் குறித்து இப்போது எதுவும் பேச வேண்டாம். கட்சி வளர்ச்சியை முக்கிய இலக்காக கொண்டு செயல்படவேண்டும். தற்போது சாதாரண ஆர்ப்பாட்டம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது; எதிர்காலத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us