Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருப்பூர் அரசு மருத்துவமனையில்பரிசோதித்து கொண்ட கலெக்டர்

திருப்பூர் அரசு மருத்துவமனையில்பரிசோதித்து கொண்ட கலெக்டர்

திருப்பூர் அரசு மருத்துவமனையில்பரிசோதித்து கொண்ட கலெக்டர்

திருப்பூர் அரசு மருத்துவமனையில்பரிசோதித்து கொண்ட கலெக்டர்

ADDED : ஜூலை 15, 2011 12:39 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவமனையின் மண்டல நோய் கண்டறியும் மையத்தில், கலெக்டர் மதிவாணன், நேற்று உடல் பரிசோதனை செய்து கொண்டார்.தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் ஏழு பகுதிகளில், நோய் கண்டறியும் மையம் இயங்குகிறது. திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே, அரசு மருத்துவமனை உள்ள புறநோயாளிகள் பிரிவில் இம்மையம் உள்ளது. அதிநவீன மருத்துவ பரிசோதனை கருவிகள் இங்குள்ளன. தனியார் மருத்துவமனைகளில் உள்ளது போன்ற ஆய்வுக்கூடம் மற்றும் மருத்துவ பரிசோதனை கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் சேர்த்து இந்த ஒரு மையம் செயல்படுகிறது. முழு உடல் பரிசோதனை மற்றும் 68 விதமான பல்வேறு நோய் கண்டறியும் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.கலெக்டர் மதிவாணன், நேற்று காலை, இந்த மையத்துக்கு வந்தார். அரசு துறை அலுவலகங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் நடக்கும் இடங்களில் திடீர் ஆய்வு நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருவதால், இந்த மையத்திலும் ஆய்வு மேற்கொண்டதாக தகவல் பரவியது. ஆனால், தனது பெயரில் கலெக்டர் பணம் செலுத்தி, பல்வேறு உடல் பரிசோதனைகளை எடுத்துக் கொண்டார். ரத்தம் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.

எக்ஸ்-ரே மற்றும் இ.சி.ஜி., உள்ளிட்ட பரிசோதனைகளையும் எடுத்துக் கொண்டார்.அவர் கூறுகையில், ''அரசு மருத்துவமனையில் 250 ரூபாய்க்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் 2,500 ரூபாய் வரை செலவாகும். அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அதிநவீன கருவிகள் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இம்மையத்துக்கு மாதம் 1,000 பேர் வரை வருகின்றனர்; நானும் உடல் பரிசோதனை செய்து கொண்டேன்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us