/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/குளங்களுக்கு பி.ஏ.பி., தண்ணீர் வழங்க வேண்டுகோள்குளங்களுக்கு பி.ஏ.பி., தண்ணீர் வழங்க வேண்டுகோள்
குளங்களுக்கு பி.ஏ.பி., தண்ணீர் வழங்க வேண்டுகோள்
குளங்களுக்கு பி.ஏ.பி., தண்ணீர் வழங்க வேண்டுகோள்
குளங்களுக்கு பி.ஏ.பி., தண்ணீர் வழங்க வேண்டுகோள்
ADDED : செப் 04, 2011 11:06 PM
உடுமலை : சோமவாரப்பட்டி ஊராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு
தீர்வு காண பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீரை குளங்களுக்கு வழங்க வேண்டும் என
கோரிக்கை எழுந்துள்ளது.குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி ஊராட்சிக்கு
தாமரைப்பாடி மற்றும் அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில்
குடிநீர் வழங்கப்படுகிறது.
குடியிருப்புகள் அதிகரிப்பு உட்பட காரணங்களால்
கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீர் பற்றாக்குறையாக
உள்ளது. இந்நிலையில், ஊராட்சி சார்பில் 10க்கும் அதிகமான இடங்களில்
அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களில் பருவமழை குறைவு காரணமாக போதிய தண்ணீர்
கிடைப்பதில்லை. இதனால், சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சோமவாரப்பட்டி,
பெதப்பம்பட்டி, ஆர்.ஜி., நகர் ஆகிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு
நிலவி வருகிறது.கிராம மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய
நிலை உள்ளது. திருமூர்த்தி அணையிலிருந்து செயல்படுத்தப்படும் புதிய
கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளும் இழுபறியாகி இதுவரை கிராமத்திற்கு குடிநீர்
கிடைக்கவில்லை. குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க பி.ஏ.பி., வாய்க்கால்
மூலம் சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் குளங்களுக்கு
தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குளங்களில் தண்ணீர்
நிரப்புவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளூர் நீராதாரங்களான
போர்வெல்களுக்கு நீர் வரத்து கிடைக்கும். இதனால், குடிநீர் தட்டுப்பாட்டை
பெருமளவு தவிர்க்கலாம். இது குறித்து அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்
சுந்தரசாமி மற்றும் விவசாய அணி ஒன்றிய இணை செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர்
பொதுப்பணித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில், சோமவாரப்பட்டி
ஊராட்சிக்குட்பட்ட குளங்களில் பி.ஏ.பி., திட்ட வாய்க்கால்கள் மூலம் தண்ணீர்
நிரப்ப அனுமதி வழங்க வேண்டும். திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி.,
நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆயக்கட்டு
விவசாயிகள் அனுமதியுடன் குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்' என மனுவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பாளையம்,
கொங்கல்நகரம் போன்ற ஊராட்சிகள் சார்பிலும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க
பி.ஏ.பி., திட்ட வாய்க்கால்களில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் வழங்க
வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.