Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு பணியாளர் தேர்வாணைய எழுத்துத் தேர்வு 46 மையங்களை கண்காணிக்க பறக்கும்படை

அரசு பணியாளர் தேர்வாணைய எழுத்துத் தேர்வு 46 மையங்களை கண்காணிக்க பறக்கும்படை

அரசு பணியாளர் தேர்வாணைய எழுத்துத் தேர்வு 46 மையங்களை கண்காணிக்க பறக்கும்படை

அரசு பணியாளர் தேர்வாணைய எழுத்துத் தேர்வு 46 மையங்களை கண்காணிக்க பறக்கும்படை

ADDED : ஜூலை 30, 2011 01:23 AM


Google News
கோவை : அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எழுத்துத்தேர்வில், முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.கோவை கலெக்டர் கருணாகரன் அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகளுக்கான எழுத்துத் தேர்வுகள், இன்று கோவையில் நடக்கிறது. கோவை மாவட்டத்தில், கோவை நகரில் 41 தேர்வு மையங்களிலும், பொள்ளாச்சி நகரில் 5 மையங்களிலும் ஆக மொத்தம் 46 தேர்வு மையங்கள் நடக்கவுள்ளன. இதில் 20 ஆயிரத்து 627 பேர், இந்தத் தேர்வினை எழுதவுள்ளனர். அனைத்துத் தேர்வு மையங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வு எழுதுவதற்கு தேர்வாணையத்தில் இருந்து அனுமதிச் சீட்டு பெறப்படாத நபர்கள், தேர்வாணையத்துக்கு விண்ணப்பித்த விபரங்களுடன் மாவட்ட வருவாய் அலுவலரை அணுகலாம். தேர்வு எழுதுவோர் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்கள் எதிர்காலத்தில் அரசுத் தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவதோடு, அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட வேண்டாம்; விவசாயிகளுக்கு கலெக்டர் 'அட்வைஸ்'

கோவை : ''அரசுத்துறையினருடன் மோதல் போக்கைக் கடை பிடிக்க வேண்டாம்; உரிய முறையில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று கலெக்டர் உறுதி அளித்தார். கோவை மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம், கலெக்டர் கருணாகரன் தலைமையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கந்தசாமி பேசுகையில்,''விவசாயத்துக்கு மின் இணைப்பு கிடைப்பது குதிரைக் கொம்பாகவுள்ளது. முந்தைய அரசு, 2 லட்சம் இணைப்புத் தர இலக்கு நிர்ணயித்தது; அதைத்தரவும் மின் வாரிய அதிகாரிகளுக்கு மனமில்லை'' என்றார். இச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் வழுக்குப்பாறை பாலு பேசுகையில், ''கேஸ் நிறுவனத்தின் குழாய்களை, அதற்காகத் திட்டமிட்ட பாதையில் பதிக்காமல், விவசாய நிலங்களில் கொண்டு வருகின்றனர்,'' என்றார். இதற்காக, போராட்டம் நடத்தலாம் என திட்டமிட்டிருந்ததாக அவர் கருத்துத் தெரிவித்தார். அதேபோல, கதிரவன் என்ற விவசாயி மீது காவல்துறை எடுத்த நடவடிக்கையைக் கண்டித்தும் பலர் பேசினர். கலெக்டர் குறுக்கிட்டு, ''அரசுத்துறையினருடன் விவசாயிகள் மோதல் போக்கைக் கடை பிடிக்க வேண்டாம்; பேசினாலே பல விஷயங்கள் சரியாகி விடும்,'' என்றார். பாலாறு பாசனப் படுகை விவசாயிகள் சங்கத்தலைவர் மெடிக்கல் பரமசிவம் பேசுகையில்,''பாலாடு படுகைக்கு வரும் ஆக.15ல் தண்ணீர் திறந்து விடுவதற்குள் கால்வாய்களை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். தொண்டாமுத்தூரில் காட்டு யானை ஊடுருவலைக் கட்டுப்படுத்த, விவசாயிகளுக்கு 'சியர்ச் லைட்' வழங்க வேண்டுமென்ற கோரிக்கையையும் வனத்துறை ஏற்கவில்லை என்று கதிரவன் என்ற விவசாயி குற்றம்சாட்டினார். அரசிடமிருந்து அனுமதியும், நிதியும் வந்தவுடன் அவை வழங்கப்படுமென்று ரேஞ்சர் பார்த்திபன் தெரிவித்தார். அத்திப்பாளையம் துரைசாமி பேசுகையில்,''யானைகளின் வழித்தடங்களில் ஆன்மிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் 21 பெரிய கட்டடங்கள் இருப்பதாக வனத்துறை கூறுகிறது. அவற்றை அகற்ற வேண்டும்; அல்லது அவர்களையே யானைகளுக்குரிய உணவு மற்றும் குடிநீர்த் தொட்டி அமைத்துத்தர உத்தரவிட வேண்டும்,'' என்றார். கலெக்டர் பதிலளிக்கையில், ''தவறு செய்த சிலருக்கு ஏற்கனவே எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. மறுபடியும் எச்சரிப்போம்; இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us