சென்னையின் முகத்தையே மாற்றிவிடும் அளவுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், இங்குள்ள பாரம்பரிய கட்டடங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் சி.எம்.டி.ஏ.,வால் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தோ சார்கெனிக் கட்டடகலையில் கட்டப்பட்ட அண்ணா சாலையில் உள்ள பாரத் இன்சூரன்ஸ் கட்டடத்தை இடிக்கும் முயற்சி கோர்ட் மூலம் தடுக்கப்பட்டது, சி.எம்.டி.ஏ.,வின் முக்கிய சாதனையாக குறிப்பிடப்படுகிறது.
இந்த பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில், பாரம்பரிய கட்டடங்கள் பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள பாரம்பரிய கட்டடங்கள் குறித்த தகவல்களை திரட்டி வருகின்றனர்.
கட்டப்பட்ட காலம், கட்டியதற்கான காரணம் அல்லது பயன்பாடு, கட்டடகலை, அதன் இப்போதைய நிலை ஆகிய அம்சங்கள் அடிப்படையில் இதற்கான விவரங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பாரம்பரிய கட்டடங்கள் இருக்கும் இடத்திலோ, அதன் அருகிலோ கட்டுமான திட்டங்களை மேற்கொள்வதை முறைப்படுத்தும் வகையில் சிறப்பு விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன என சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்னையில் இந்தோ சார்கெனிக் முறைப்படி கட்டப்பட்டு தற்போதுள்ள பாரம்பரிய கட்டடங்கள்:
எஸ்பிளனேடு: தலைமை தபால் அலுவலகம், தற்போது பாரத ஸ்டேட் வங்கி செசயல்படும் கட்டடம், உயர்நீதி மன்றம், சட்ட கல்லூரி, ஒய்.எம்.சி.ஏ., பெரு நகர நீதி மன்றம்.
சேப்பாக்கம்: செனட் கட்டடம், சென்னை பல்கலைக்கழக நூலகம், சேப்பாக்கம் அரன்மனை, பொதுப்பணித்துறை அலுவலகம், கீழ்திசை ஆய்வு நூலகம், விக்டோரியா விடுதி.
அண்ணா சாலை: பாரத் இன்சூரன்ஸ் கட்டடம், அகுசந்த் மேன்ஷன், பூம்புகார் விற்பனையகம்.
கிண்டி: கிண்டி பொறியியல் கல்லூரி, போட் கிளப் செயல்படும் பழைய மௌபரீஸ் கட்டடம்.
எழும்பூர்: பெருநகர நீதி மன்றம், அருங்காட்சியகம்- கன்னிமாரா நூலகம், எழும்பூர் ரயில் நிலையம், கால்நடை மருத்துவ கல்லூரி, அரசு ஆவண காப்பகம், தேசிய கலைக்கூடம், கவின் கலை கல்லூரி.
அமைந்தகரை: புனித ஜார்ஜ் பள்ளி, தெற்கு ரயில்வே பயன்பாட்டில் உள்ள கட்டடங்கள்.
பூக்கடை: சென்னை மருத்துவ கல்லூரி உடற்கூறுயியல் பிரிவு செயல்படும் கட்டடம்.