ADDED : அக் 03, 2011 07:36 PM
சென்னை: விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய அளவில், நெல் விலையை உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, நெல் உட்பட உணவுப் பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கும். அதன் அடிப்படையில், இந்தாண்டு குறுவை மற்றும் சம்பா கொள்முதல் செய்யப்படும் முதல் ரக (ஏ கிரேடு) நெல், குவிண்டாலுக்கு 1,110 ரூபாய், சாதாரண நெல் ரகம், குவிண்டாலுக்கு 1,080 ரூபாய் என்ற குறைந்தபட்ச விலையாக நிர்ணயித்து, மத்திய அரசு உத்தரவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு, மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தொகையை விட, குவிண்டாலுக்கு கூடுதலாக ஊக்கத் தொகையை அளிக்கும். இந்தாண்டு தமிழக அரசு, முதல் ரக(ஏ கிரேடு) நெல்லுக்கு, குவிண்டாலுக்கு 70 ரூபாயும் (1,110+70=1,180), சாதாரண நெல் ரகம் குவிண்டாலுக்கு 50 ரூபாயும் (1,080+50=1,130) உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு, இந்தாண்டு அக்., 1ம் தேதி முதல் அடுத்தாண்டு செப்., 30ம் தேதி வரை அமலில் இருக்கும். அரசின் இந்த உத்தரவால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


