தமிழகம் முழுவதும் கைவரிசை திருப்பூரில் "பலே' திருடன் கைது
தமிழகம் முழுவதும் கைவரிசை திருப்பூரில் "பலே' திருடன் கைது
தமிழகம் முழுவதும் கைவரிசை திருப்பூரில் "பலே' திருடன் கைது
ADDED : ஆக 12, 2011 02:15 AM
திருப்பூர்:தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய 'பலே'
திருடன், திருப்பூரில் சிக்கினான்; அவனிடம் இருந்து ஐந்து லட்சம் ரூபாய்
மதிப்புள்ள தங்கம்,வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டன.தாராபுரத்தை சேர்ந்தவர்
ரிஷிகிருஷ்ணகுமார்; நகை கடை உரிமையாளர். கடந்த ஏப்., 16 இரவு, கடையை
பூட்டிவிட்டு 57 சவரன் தங்க நகை மற்றும் 4.5 கிலோ வெள்ளிப் பொருட்களை ஒரு
பேக்கில் எடுத்துக் கொண்டு, டூவீலரில் புறப்பட்டார்.சீதா நகரில் உள்ள அவரது
வீட்டுக்கு இரவு 8.45 மணியளவில் சென்றபோது, வீட்டுக்கு அருகில் இருட்டில்
மறைந்திருந்த மூன்று பேர், ரிஷி கிருஷ்ணகுமாரை அரிவாளால் வெட்டினர்;
இரும்பு குழாயால் தாக்கினர்.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரிடம்
இருந்த நகைகளை, திருடர்கள் திருடிச் சென்றனர். தாராபுரம் போலீசார் வழக்கு
பதிவு செய்தனர்.இன்ஸ்பெக்டர் இளமுருகன் தலைமையிலான தனிப்படை மேற்கொண்ட
விசாரணையில், திருட்டில் ஈடுபட்டவர்களில் ஒருவன், காஞ்சிபுரம் மாவட்டம்
ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார், 26, என தெரியவந்தது. அங்கு சென்ற
போலீசார், அவனை கைது செய்தனர். விசாரணையில், பல பகுதிகளில் நடந்த
திருட்டுகளில் அவன் ஈடுபட்டது தெரியவந்தது.கடந்த ஜன., 8ல், தாராபுரம்
நஞ்சியம்பாளையம் பகுதியில் உமாதேவி என்பவரிடம் இருந்து ஐந்து சவரன்
தாலிக்கொடி பறித்தது; பிப்., 8ல் மேச்சேரி மல்லியகுந்தம் ரோட்டில் நகைக்கடை
வியாபாரி குமார் என்பவரிடம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறித்தது, மே
28ல், மேட்டுப்பாளையம் மதீனா நகரில் நகைக்கடை வியாபாரி அகமது ஜீனத் என்பவரை
தாக்கி, தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறித்தது உள்ளிட்ட பல வழக்குகளில்,
வினோத்குமார் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.ஏப்., 4ம் தேதி
விழுப்புரம் மாவட்டம் அகூர் ஏரிக்கரை அருகில் கனகசபை, முகமது ரபீக் ஆகியோரை
கொலை செய்த வழக்கிலும் இவனுக்கு தொடர்பிருப்பது தெரிந்தது.இத்துடன்,
திருவாரூரில் நடந்த இரண்டு கொலை முயற்சி வழக்குகளிலும், சுவாமி சிலை
திருட்டு வழக்கிலும், மன்னார்குடியில் கொலை முயற்சி வழக்கிலும்,
காரைக்காலில் சிவன் சிலை திருடிய வழக்கிலும், ஈரோடு கருங்கல்பாளையத்தில்
ஒரு திருட்டு வழக்கிலும் 'பிடி வாரன்ட்' நிலுவையில் உள்ளது.
பிடிபட்ட வினோத்குமாரிடம் இருந்து, 28 சவரன் நகை மற்றும் கால் கிலோ வெள்ளி
என, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன;
ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. திருட்டுக் கும்பலை சேர்ந்த கண்ணதாசன்,
ஆரோக்கியதாஸ் ஆகியோரை மேட்டுப்பாளையம் போலீசார் ஏற்கனவே கைது
செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 70 சவரன் நகைள் மீட்கப்பட்டுள்ளன.
இத்திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகள் குறித்தும் போலீசார்
தீவிரமாக விசாரிக்கின்றனர்.


