பாலி குண்டு வெடிப்பு குற்றவாளி இந்தோனேசியாவிடம் ஒப்படைப்பு
பாலி குண்டு வெடிப்பு குற்றவாளி இந்தோனேசியாவிடம் ஒப்படைப்பு
பாலி குண்டு வெடிப்பு குற்றவாளி இந்தோனேசியாவிடம் ஒப்படைப்பு
ADDED : ஆக 11, 2011 11:59 PM

ஜகர்த்தா: பாலி குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி உமர் பதேக்கை, இந்தோனேசியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்.இந்தோனேசியாவின் முக்கிய சுற்றுலாத் தலமான பாலியில், கடந்த 2002ல் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில், வெளிநாட்டினர் உட்பட, 202 பேர் உயிரிழந்தனர். இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான உமர் பதேக்கை, இந்தோனேசிய போலீசார் தேடி வந்தனர். குண்டு வெடிப்புக்கு தேவையான வெடி பொருட்களை தயாரித்தது, உமர் பதேக் என, இந்தோனேசிய போலீசார் கூறி வந்தனர்.இந்நிலையில், கடந்த ஜனவரியில், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில், உமர் பதேக்கை, பாக்., போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணைக்காக, உமர் பதேக்கை நாடு கடத்தும்படி, பாக்., அரசுக்கு, இந்தோனேசிய அரசு, கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று, நேற்று இந்தோனேசியாவுக்கு உமர் பதேக்கை, பாக்., அரசு நாடு கடத்தியது.
பலத்த பாதுகாப்புடன், ஜகர்த்தாவுக்கு விமானத்தில் வந்திறங்கிய உமர் பதேக்கை, மேற்கு ஜாவாவில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு, பாதுகாப்பு படையினர் அழைத்துச் சென்றனர். இதுகுறித்து, இந்தோனேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் அன்ஸ்யாத் மாபி கூறுகையில்,'ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட, அபோதாபாத் நகரில் தான், உமர் பதேக்கை, போலீசார் கைது செய்துள்ளனர். இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என, சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். தென் கிழக்கு ஆசியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு,அல் - குவைதாவுடன் தொடர்பு இருக்கலாம் எனவும், தெரியவந்துள்ளது'என்றார்.