ADDED : செப் 19, 2011 12:41 AM
வேதாரண்யம்: வேதாரண்யம் சோமநாதர் கோவில் அருகே பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. வேதாரண்யம் 20வது வார்டில் 300க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க, மூன்று கி.மீ., தூரத்தில் உள்ள ராஜாஜி பூங்காவில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. பெரும் அவதிக்குள்ளான மக்கள், தங்களது பகுதியிலேயே பகுதி நேர ரேஷன் கடை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், வள்ளியம்மை சாலை மற்றும் நல்லதங்கா காடு பகுதி ரேஷன் கார்டுகள் பிரிக்கப்பட்டன. சோமநாதர் கோவில் அருகே பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டது. எம்.எல்.ஏ., காமராஜ், ரேஷன் கடையை திறந்து வைத்து, மக்களுக்கு ரேஷன் பொருட்களை நேற்று வழங்கினார்.
நிகழ்ச்சியில், தாசில்தார் அசோகன், வட்ட வழங்கல் அலுவலர் அமுத விஜயரங்கன் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.