"ஆமாம்... நான் லஞ்சம் வாங்கினேன்': தி.மு.க., தலைவர் ஆவேசம்
"ஆமாம்... நான் லஞ்சம் வாங்கினேன்': தி.மு.க., தலைவர் ஆவேசம்
"ஆமாம்... நான் லஞ்சம் வாங்கினேன்': தி.மு.க., தலைவர் ஆவேசம்
மன்னார்குடி: மன்னார்குடி நகராட்சிக் கூட்டத்தில், 'தி.மு.க., தலைவர் கார்த்திகா பணம் வாங்கிக் கொண்டு, அ.தி.மு.க.,வை சேர்ந்த முக்கியப் புள்ளிகளுக்கு டெண்டர் கொடுத்தார்' என, தி.மு.க., கவுன்சிலர்கள் எழுப்பிய புகாருக்கு, 'ஆமாம், பணம் வாங்கி கொண்டுதான் டெண்டர் வழங்கினேன்' என, நகராட்சித் தலைவர் ஆவேசமாக பதிலளித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடி நகராட்சி கடைசிக் கூட்டம் நகராட்சி தலைவர் கார்த்திகா தலைமையில், நேற்றுமுன்தினம் மாலை நடந்தது.
தி.மு.க., கவுன்சிலர் வீரக்குமார்: நகராட்சியில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை, 24 மணி நேரத்துக்கு முன் கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று விதி இருக்கும்போது, நான்கு மணி நேரத்துக்கு முன்தான் அனைவருக்கும் வழங்கினர். எனவே, இக்கூட்டம் அங்கீகாரமற்ற கூட்டம்.
சேர்மன் கார்த்திகா: தீர்மானத்தில் இரண்டு திட்டம் புதியதாக சேர்க்கப்பட்டதால் தான் காலதாமதம் ஏற்பட்டது.
தி.மு.க., கவுன்சிலர் வீரக்குமார்: தற்போது அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றக் கூடாது. அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
தி.மு.க., கவுன்சிலர் கரிகாலன்: அ.தி.மு.க., முக்கிய புள்ளிகளிடம் லஞ்சமாக பணத்தை பெற்றுக் கொண்டு தான், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள டெண்டரை ஒதுக்கியுள்ளீர்கள் என்று ஆவேசமாக கூறினார்.
கார்த்திகா: ஆமாம். பணத்தை பெற்றுக்கொண்டுதான் தீர்மானம் நிறைவேற்றினோம். (தலைவரின் ஒப்புதலால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது).
தலைவரின் ஆவேச பேச்சால் ஆத்திரமடைந்த, தி.மு.க.,வை சேர்ந்த வீரக்குமார், கரிகாலன், ஹஜ்மைதீன், மதியரசன், பாரி உள்ளிட்ட, 10 கவுன்சிலர்களும், காங்கிரசை சேர்ந்த வடுகநாதன், சலீம், நகராட்சி துணைத்தலைவர் தமிழரசி வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக தன்னிச்சையாக கூறி, சேர்மன் கார்த்திகா கூட்டத்தை நிறைவு செய்தார்.