ADDED : செப் 25, 2011 05:58 AM
மதுரை:உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,வில் வாய்ப்பு கிடைக்காதவர்கள், மதுரையில் மாவட்ட செயலரை முற்றுகையிட்டதால், கைகலப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி போன்ற பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் நபர்களுக்கான ஒப்புதல் கடிதம் வழங்கும் நிகழ்ச்சி, மதுரையில் 'ஓட்டல் தமிழ்நாடு'ல் நேற்று நடந்தது.
காலை 10 மணி முதல் நடந்த இக்கூட்டத்தில், மாவட்ட செயலர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.போட்டியிடுபவர்களுக்கான வாய்ப்பு, ஒருதலைபட்சமாக வழங்கப்படுகிறது என, பிரச்னை எழுந்தது. இதனால், நிகழ்ச்சியில் இருந்து ராஜேந்திர பாலாஜி வெளியேறினார். அவர், ஓட்டலின் வெளியே இருந்து காரில் புறப்பட்டவுடன், காம்பவுண்ட் கேட்டை ஒருதரப்பினர் பூட்டினர். இதனால், அவரது ஆதரவாளர்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து பிரச்னையில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.


