/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தனியாரின் ஆக்கிரமிப்பில் ஸ்டேன்லி பார்க் மைதானம்தனியாரின் ஆக்கிரமிப்பில் ஸ்டேன்லி பார்க் மைதானம்
தனியாரின் ஆக்கிரமிப்பில் ஸ்டேன்லி பார்க் மைதானம்
தனியாரின் ஆக்கிரமிப்பில் ஸ்டேன்லி பார்க் மைதானம்
தனியாரின் ஆக்கிரமிப்பில் ஸ்டேன்லி பார்க் மைதானம்
ADDED : செப் 16, 2011 02:24 AM
குன்னூர்:குன்னூர் அருகே அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டு மைதானம்
பயன்படுத்த தகுதியற்ற நிலையில், தனியாரின் ஆக்கிரமிப்பில் உள்ளதால்,
விளையாட்டு ஆர்வமுள்ள இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர்.குன்னூர்
ஓட்டுப்பட்டரை அருகே ஸ்டேன்லி பார்க் பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது.
மாவட்ட விளையாட்டு துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த விளையாட்டு மைதானத்தில்
ஓட்டுப்பட்டரை, ஸ்டேன்லி பார்க், கரடிப்பள்ளம் உட்பட சுற்றுவட்டார
பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
மைதானத்தை ஒட்டி சாரண, சாரணியர் இயக்க முகாமும் அமைந்துள்ளதால், வெளியூரில்
இருந்து வரும் சாரண, சாரணியர் இயக்க மாணவ, மாணவியருக்கு மைதானம்
பயனளிக்கிறது. மைதானம் பராமரிப்பின்றி சேறு, சகதி நிறைந்து பயன்படுத்த
தகுதியற்ற நிலையில் உள்ளது. மனித உரிமைகள் கழக ஓட்டுப்பட்டரை பகுதி தலைவர்
தேவசகாயம் பெனட், செயலர் தினேஷ் ஆகியோர் மாநில முதல்வருக்கு அனுப்பியுள்ள
மனு:
விளையாட்டு மைதான ஓரத்தில் தனியாருக்கு சொந்தமான பசுந்தேயிலை கிடங்கு
உள்ளது; தினமும், 100 மூட்டைகள் வரை பசுந்தேயிலை லாரிகளில் ஏற்றி அனுப்பி
வைக்கப்படுகிறது. லாரிகள் அனைத்தும் மைதானத்திலேயே நின்று, தேயிலையை ஏற்றி
செல்கின்றன. மைதானத்தை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்கு கட்டுமானப்
பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் அனைத்தும் இந்த மைதானத்தின் மையப்பகுதியில்
நின்று பொருட்களை இறக்கி செல்கின்றன.
இங்குள்ள குடியிருப்புவாசிகளின்
வாகனங்கள் அனைத்தும் இந்த மைதானத்தின் வழியாக தான் பயணிக்கின்றன. மைதானத்தை
ஒட்டியவாறு உள்ள அதிநவீன தங்கும் விடுதி, 30 மீ., உயரத்திற்கு மேல்
கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதி கட்டுமானப் பணிக்கு பொருட்களை எடுத்து வந்த
லாரிகள் அனைத்தும் மைதானத்தில் நின்று தான் பொருட்களை இறக்கி சென்றன.
இளைஞர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த
மைதானம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.மாநில முதல்வர்
இவ்விஷயத்தில் தலையிட்டு, விளையாட்டு மைதானத்தை சுற்றி வேலி அமைத்து,
பராமரித்து, விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில்
கூறப்பட்டுள்ளது.


