ஹசாரே ஆதரவாளர்களுக்கு அடி, உதை : ஸ்ரீராம் சேனா அமைப்பினர் ஆத்திரம்
ஹசாரே ஆதரவாளர்களுக்கு அடி, உதை : ஸ்ரீராம் சேனா அமைப்பினர் ஆத்திரம்
ஹசாரே ஆதரவாளர்களுக்கு அடி, உதை : ஸ்ரீராம் சேனா அமைப்பினர் ஆத்திரம்
UPDATED : அக் 13, 2011 11:25 PM
ADDED : அக் 13, 2011 10:40 PM

புதுடில்லி: டில்லியில் பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியவர்களை, ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக சேவகர் அன்னா ஹசாரே அணியைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட் அருகேயுள்ள வழக்கறிஞர்கள் சேம்பரிலேயே, வாலிபர்கள் இருவரால் கடுமையாக தாக்கப்பட்டார். தாக்கியவர்கள் ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என, தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நாளை வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. கைது செய்யப்பட்டவர்களை நேற்று பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்திய போது, ஹசாரே அணியைச் சேர்ந்தவர்களும், ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்களும் கோர்ட் வளாகத்தில் கூடியிருந்தனர். அந்த நேரத்தில், ஹசாரே மற்றும் பிரசாந்த் பூஷனுக்கு எதிராக, ஸ்ரீராம் சேனா அமைப்பினர் கோஷங்கள் எழுப்பினர். இதற்கு ஹசாரே அணியினர் எதிர்ப்புத் தெரிவிக்கவே, வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். ஹசாரே ஆதரவாளர்கள் சிலரை, ஸ்ரீராம் சேனா அமைப்பினர் கடுமையாகத் தாக்கினர். அதில், காயமடைந்த இருவர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் சேனா அமைப்பினர், 'காஷ்மீர் தொடர்பான தன் நிலையை ஹசாரே தெளிவுபடுத்த வேண்டும்' என, கோஷமிட்டனர்.


