Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வாகன ஓட்டிகளின் உயிரை பறிக்கும் ஐபாட், வாக்மேன்...

வாகன ஓட்டிகளின் உயிரை பறிக்கும் ஐபாட், வாக்மேன்...

வாகன ஓட்டிகளின் உயிரை பறிக்கும் ஐபாட், வாக்மேன்...

வாகன ஓட்டிகளின் உயிரை பறிக்கும் ஐபாட், வாக்மேன்...

ADDED : ஆக 29, 2011 11:58 PM


Google News

குற்றாலம் : ஐபாட், வாக்மேன் போன்ற கருவிகளை காதில் பொருத்திக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அமெரிக்க ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் உதவியுடன் ஐபாட், வாக்மேன் போன்ற கருவிகளை காதில் பொருத்திக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 1990ம் ஆண்டிலிருந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 12 வயதுக்குட்பட்ட டீன்ஏஜ் பருவத்தினர் நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்பட்டதில் முதல்கட்ட ஆய்வில் ஐபாட் போன்ற கருவிகளை பொருத்தி பாட்டு கேட்கும் இவர்களில் 15 சதவீதம் பேரும், இரண்டாவது கட்ட ஆய்வில் 20 சதவீதம் பேரும் காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டதாகவும் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.



மேலும் ஐபாட் கருவியை பயன்படுத்தி வரும் மாணவ, மாணவிகள் வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை கூட கேட்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது. ஐபாட் கருவியை டீன் ஏஜ் பருவத்தினர் தான் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது இக்கருவியை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருவதால் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.



பாதசாரிகள், இரண்டு, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இக்கருவியை பொருத்திக் கொண்டு செல்லும் போது அரசின் விதிமுறைகளை மீறி வாகனத்தை ஓட்டிக் கொண்டே செல்வதால் பல்வேறு விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை சாலை விபத்துக்கள் நடக்கிறது. இவர்களில் 9 ஆயிரம் பேர் வரை இறக்கின்றனர். 7 ஆயிரம் பேர் வரை சாலை விபத்துக்களில் படுகாயமடைகின்றனர் என 2002ம் ஆண்டு சாலை விபத்து பற்றிய தமிழக அரசு போக்குவரத்து ஆணையத்தின் புள்ளி விபரம் கூறுகிறது. எனவே பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் வகையிலும், அரசு ஊழியர்கள் அரசு பணியை காலதாமதமின்றி செய்யவும், சாலை விதிகளை பின்பற்றாமல் ஐபாட் கருவியை காதில் பொருத்தி செல்லும் வாகன ஓட்டிகளின் விபத்துக்களை தடுக்கும் பொருட்டும் ஐபாட் கருவியை பயன்படுத்த தமிழக அரசு சட்டம் நிறைவேற்றி தீவிரமாக செயல்படுத்த வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



மேலும் செல்போன், வாக்மேன் போன்ற கருவிகளை சட்டை பையில் வைத்திருக்கும்போது இதயப்பகுதி பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் மற்றொரு ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. மனிதன் இனம் வளர, வளர நாகரீக உலகில் நவீன உற்பத்தி பொருட்களும் வரத் தொடங்கி விட்டன. இதனை பொதுமக்களாகிய நாம் தான் நல்வழியில் பயன்படுத்திட வேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us