UPDATED : ஆக 28, 2011 05:33 AM
ADDED : ஆக 27, 2011 11:43 PM

மேட்டுப்பாளையம்:ஊட்டி மலை ரயில் இன்ஜின் மோதி, மிகவும் பழமையான கட்டடம் இடிந்து விழுந்தது.மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், 1886ம் ஆண்டு கட்டப்பட்ட இரண்டு பெரிய செட்டுகள் உள்ளன. ஒரு செட்டில் ஊட்டி மலை ரயில் இன்ஜினும், மற்றொன்றில் ரயில் பெட்டிகளும் நிறுத்தி, பழுது நீக்கப்படுகின்றன. இக்கட்டடம் பெரிய கற்களை வைத்து, சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டுள்ளது.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து, பழுது நீக்கிய இன்ஜினை மேட்டுப்பாளையம் கொண்டு வந்தனர். ஸ்டீம் லோகோ செட்டில், கடந்த நான்கு நாட்களாக, மலை மீது ரயில் பெட்டிகளை தள்ளிச் செல்லும் அளவுக்கு, நீராவி தாங்கி நிற்கிறதா என, இன்ஜினில் ஆய்வு செய்தனர். நேற்று காலை 6.30 மணிக்கு, இந்த இன்ஜினை செட்டிலிருந்து மற்றொரு இன்ஜின் வெளியே இழுத்து வந்தது. அப்போது, இன்ஜின் மேல்பகுதி, கட்டடத்தின் வளைவு பகுதியை இடித்த படி வெளியே வந்தபோது, கட்டடத்தின் ஒரு பகுதி முற்றிலும் உடைந்ததால், இன்ஜின் நிறுத்தப்பட்டது.ரயில்வே ஊழியர்கள் கூறுகையில், 'செட்டின் உள்ளே இன்ஜினை கொண்டு சென்ற போது, சுவரில் மோதவில்லை. அதே இன்ஜினை வெளியே எடுத்து வந்த போது, சுவரில் மோதி இடிந்துள்ளது. ஆய்வுக்கு பிறகு தான் முழுமையான காரணம் கூற முடியும்' என்றனர்.


