Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையப்பர் கோயிலில் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம்

நெல்லையப்பர் கோயிலில் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம்

நெல்லையப்பர் கோயிலில் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம்

நெல்லையப்பர் கோயிலில் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம்

ADDED : ஆக 01, 2011 02:09 AM


Google News
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் ரூ.8 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அன்னதானக் கூடம் திறக்கப்படாமல் உள்ளது.

அன்னதானக் கூடத்தை திறக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.நெல்லையப்பர் கோயில் 14.5 ஏக்கர் பரப்பளவுடையது. இந்த கோயிலில் கோடை கால வசந்த கட்டளை நடத்துவதற்காக மன்னர் காலத்திலேயே வசந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வசந்த உற்சவ விழா இங்கு தான் நடைபெறும்.தமிழக அரசின் அன்னதான திட்டம் நெல்லையப்பர் கோயிலில் செயல்படுத்தப்பட்டு வருவதால் தினந்தோறும் 150 ஏழை பக்தர்களுக்கு வசந்த மண்டபத்தில் வைத்து உணவு சமைத்து பரிமாறப்படுகிறது. வசந்த மண்டபத்தில் வைத்து உணவு சமைக்கப்படுவதாலும், பரிமாறப்படுவதாலும் அந்த இடங்கள் விறகு அடுப்பின் புகைபட்டும், பக்தர்கள் சாப்பிடும் இலைகள் ஆங்காங்கே போடப்பட்டும் பாழாவதாக பக்தர்கள் தரப்பில் இருந்து புகார்கள் சென்றன.இதையடுத்து காந்திமதிஅம்பாள் சன்னதிக்கு தெற்கு பகுதியில் உள்ள காலியிடத்தில் அன்னதானக் கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அறநிலையத்துறை நிதியில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அன்னதானக் கூடத்தில் காஸ் அடுப்பு வைத்து சமையல் செய்ய வசதி, பக்தர்கள் அமர்ந்து சாப்பிட கடப்பா கல் டேபிள், பெஞ்ச், டைல்ஸ் பதிக்கப்பட்ட தரைத்தளம், சமையல் பொருட்கள் வைக்க பாதுகாப்பு அறை, பேன் வசதி, வாஷ் பேசின், 150 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.ஆனால் அன்னதானக் கூடம் கட்டுமான பணிகள் முடிவடைந்து 6 மாதம் மேல் ஆகியும் அன்னதானக் கூடம் இதுவரை திறக்கப்படவில்லை. என்ன நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாமல் உள்ளது. அன்னதானக் கூடத்தை திறக்க அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us