Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கழிவுநீர் ஓடை உடைந்ததால் ரோட்டில் கழிவுநீர் பத்திரப்பதிவு அலுவலகத்தை சூழ்ந்ததால் பரபரப்பு

கழிவுநீர் ஓடை உடைந்ததால் ரோட்டில் கழிவுநீர் பத்திரப்பதிவு அலுவலகத்தை சூழ்ந்ததால் பரபரப்பு

கழிவுநீர் ஓடை உடைந்ததால் ரோட்டில் கழிவுநீர் பத்திரப்பதிவு அலுவலகத்தை சூழ்ந்ததால் பரபரப்பு

கழிவுநீர் ஓடை உடைந்ததால் ரோட்டில் கழிவுநீர் பத்திரப்பதிவு அலுவலகத்தை சூழ்ந்ததால் பரபரப்பு

ADDED : செப் 21, 2011 12:55 AM


Google News
தூத்துக்குடி: கழிவுநீர் ஓடை உடைந்து கழிவுநீர் பத்திரப்பதிவு அலுவலகத்தை சூழ்ந்து கொண்டதால் பத்திரம் பதிவு செய்ய வருவோர், ஊழியர்கள், பத்திர எழுத்தர்கள் கடும் திண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாநகராட்சியின் பிரதான பகுதியாக புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. வளர்ந்து வரும் இந்த பகுதியில் ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளன. பஸ் ஸ்டாண்டை அடுத்து ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் அமைந்துள்ளது. நான்கு அலுவலகங்கள் ஒரே இடத்தில் உள்ளதால் தினமும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் பத்திரம் பதிவு செய்யவும், வில்லங்க நகல் எடுக்கவும் வருகின்றனர்.இதனால் இந்த பகுதி எப்போதும் மிக பிசியாக காணப்படும். இந்த அலுவலகத்தை ஒட்டி பத்திரம் எழுதுவோர் கட்டடமும் இயங்கி வருகிறது. இங்கும் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பத்திரப்பதிவு அலுவலகத்தை சுற்றி கழிவுநீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கழிவுநீர் ஓடை உடைந்து அந்த கழிவுநீர் முழுவதும் ஆறாக பெருக்கெடுத்து ஓடி பத்திரப்பதிவு அலுவலகத்தை சூழ்ந்து நிற்கிறது. பத்திரப்பதிவு அலுவலகம் வரும் ரோடு முழுவதும் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என்றால் கடும் துர்நாற்றத்துடன் கழிவுநீருக்குள் இறங்கித்தான் செல்ல வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இதனால் மக்கள் பரிதவித்து கொண்டிருக்கின்றனர். பத்திரப்பதிவு அலுவலக வாசல் வரை கழிவு நீர் தேங்கியுள்ளது. தமிழகத்தில் அரசுக்கு அதிக வருவாயை ஈட்டி தரும் துறைகளில் பத்திரப்பதிவுத்துறை முதன்மை பெற்று விளங்குகிறது. கழிவுநீர் தேங்கி கிடப்பதால் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருவதற்கே மக்கள் அச்சப்பட்டு கொண்டிருக்கின்றனர். காரணம் சில நாட்களாக தொடர்ந்து கழிவுநீர் தேங்கி கிடப்பதால் அதில் பூச்சிகள், கொசுக்கள், புழுக்கள் போன்றவை கிடக்கிறது. கழிவுநீரில் நடந்து செல்லும் போது ஏதாவது தொற்று நோய்கள் ஏற்பட்டு விடுமோ என்று மக்கள் பயந்து செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு குழி தோண்டி சரியாக மூடாமல் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர். அந்த குழிகளில் தற்போது கழிவுநீர் ஓடை உடைந்த தண்ணீர் சென்று நிரம்பியுள்ளது.

தற்போது குழி இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு கழிவுநீர் தேங்கியிருப்பதால் இந்த வழியாக சைக்கிளில் வரும் மாணவ, மாணவிகள், முதியோர்கள் தெரியாமல் குழிக்குள் விழுந்து விட்டால் சுமார் பத்து அடியில் உள்ள இந்த குழியில் சிக்கி கடும் பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள ஒட்டு மொத்த ரோடு முழுவதும் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் வேறு வழியின்றி இதில் தான் நடந்து செல்ல வேண்டிய நிலை இந்த பகுதி மக்களுக்கு உருவாகியுள்ளதால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.பத்திரப்பதிவு அலுவலகத்தை சுற்றி தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்றி மக்கள் சிரமம் இல்லாமல் அலுவலகத்திற்கு வந்து செல்ல ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு தமிழ்நாடு பத்திரநகல் எழுதுவோர் சங்க மாநில பொருளாளர் சிவசங்கரராமன் (எ) கண்ணன், மாவட்ட தலைவர் ராஜ்குமார் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். நகரின் பிரதான பகுதியில் மக்கள் அதிகமாக நடமாடும் பத்திரப்பதிவு அலுவலகத்தை சுற்றி தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, அந்த பகுதியை சுத்தம் செய்து மக்கள் பயம் இல்லாமல் அந்த பகுதிக்கு சென்றுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us