வலுவான லோக்பால் மசோதா வேண்டும் : பிரகாஷ் கராத் வலியுறுத்தல்
வலுவான லோக்பால் மசோதா வேண்டும் : பிரகாஷ் கராத் வலியுறுத்தல்
வலுவான லோக்பால் மசோதா வேண்டும் : பிரகாஷ் கராத் வலியுறுத்தல்

திருவண்ணாமலை : ''ஊழலை ஒழிக்கும் வகையில், வலுவான லோக்பால் மசோதாவை அரசு கொண்டு வர வேண்டும்'' என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் பிரகாஷ் கராத் பேசினார்.
திருவண்ணாமலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தை, அகில இந்திய பொதுச் செயலர் பிரகாஷ் கராத், நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
பொதுக்கூட்டத்தில் பிரகாஷ் கராத் பேசியதாவது: அரசு கொண்டு வரும் லோக்பால் மசோதா வலுவானதாக இல்லை; வலுவான லோக்பால் கொண்டு வரும் வரை, மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். லோக்பால் மசோதா வரம்பிற்குள் பிரதமர், அரசு ஊழியர்கள், மந்திரிகள் ஆகியோரையும் சேர்க்க வேண்டும். ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக, ஊழலுக்கு அடித்தளமாக உள்ள பெருமுதலாளிகள், அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையை நிர்ணயிக்கின்றனர்.
விதிமுறைகளை மீறுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுத்து, தண்டனை வழங்க வேண்டும். மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கையால், நாட்டில் ஊழல் பெருகிவிட்டது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில், தனியாருக்கு நிலக்கரி சுரங்கங்களை அளித்து, கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. அதைத் தடுக்க, அவற்றை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
தாராளமயமாக்கல் கொள்கை, தனியார் மயம் போன்றவற்றால், கடந்த 20 ஆண்டு காலமாக ஊழல் நடந்து வருகிறது. பணவீக்கம் காரணமாக வரி விதிப்பு, விலைவாசி உயர்வு போன்றவை மக்களை கடுமையாக பாதித்துள்ளன. இவ்வாறு பிரகாஷ் கராத் பேசினார்.