Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சி தாலுகாவை பிரிப்பதற்கு ஆட்சேபனை : அ.தி.மு.க.,வை எதிர்த்து மல்லுக்கட்டு

பொள்ளாச்சி தாலுகாவை பிரிப்பதற்கு ஆட்சேபனை : அ.தி.மு.க.,வை எதிர்த்து மல்லுக்கட்டு

பொள்ளாச்சி தாலுகாவை பிரிப்பதற்கு ஆட்சேபனை : அ.தி.மு.க.,வை எதிர்த்து மல்லுக்கட்டு

பொள்ளாச்சி தாலுகாவை பிரிப்பதற்கு ஆட்சேபனை : அ.தி.மு.க.,வை எதிர்த்து மல்லுக்கட்டு

ADDED : ஜூலை 14, 2011 09:19 PM


Google News
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவை இரண்டாக பிரித்து கிணத்துக்கடவில் புதிய தாலுகா அமைக்க அ.தி.மு.க., தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் பொள்ளாச்சி தாலுகா பிரிப்பதில் பிரச்னை கிளம்பியுள்ளது. பொள்ளாச்சி தாலுகாவை இரண்டாக பிரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதனால் தாலுகா பிரிப்பது தொடர்பான கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொள்ளாச்சி தாலுகாவை பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு என்று இரண்டு தாலுகாவாக பிரிக்கலாம். வடக்கு தாலுகாவில், வடசித்தூர், கிணத்துக்கடவு, கோவில்பாளையம், பொள்ளாச்சி வடக்கு மற்றும் நகரம், பெரியநெகமம், ராமபட்டிணம் ஆகிய ஆறு உள்வட்டங்களை உள்ளடக்கலாம். தெற்கு தாலுகாவில், கோலார்பட்டி, பொள்ளாச்சி தெற்கு, மார்ச்சிநாயக்கன்பாளையம், ஆனைமலை, கோட்டூர் ஆகிய ஐந்து உள்வட்டங்களை உள்ளடக்கலாம். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு என்று பிரித்து மக்களிடம் ஆட்சேபனை உள்ளது என்று வருவாய்த்துறை அதிகாரிகள் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர். இந்நிலையில், பொள்ளாச்சியை இரண்டாக பிரித்து கிணத்துக்கடவு தாலுகா உருவாக்க வேண்டும். புதிய தாலுகாவை கிணத்துக்கடவை தலைமை இடமாக கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள 39 கிராம ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோன்று பொதுமக்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

அ.தி.மு.க.,வின் கோரிக்கையை முறிக்க வேண்டும் என்பதற்காக தி.மு. க.,வினர், மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அதில், பொள்ளாச்சி தாலுகாவை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்து பொள்ளாச்சியிலேயே அமைக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல முடியும். பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் இடவசதி உள்ளதால் இரண்டு தாலுகாவாக பிரிக்கும் போது புதிய கட்டடங்கள் கட்ட முடியும். ஆதிதிராவிட நலத்துறை, சமூக நலத்திட்டம், குடிமைப்பொருள் வழங்கல் துறை தனித்தாசில்தார் அலுவலகங்களும் இரண்டாக பிரியும். இதன் மூலம் மக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்பதை வலியுறுத்தி இருந்தனர். பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டே இரண்டு தாலுகாவையும் அமைக்க வேண்டும் என்று, தி.மு.க., ம.தி. மு.க., காங்., கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரச்னை தொடர்பாக கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் கூறியதாவது: பொள்ளாச்சி தாலுகாவை இரண்டாக பிரித்தால் தான் நிர்வாக வசதிக்கு எளிதாக இருக்கும். பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள கிணத்துக்கடவு, வடசித்தூர், கோவில்பாளையம் ஆகிய உள்வட்டத்தையும், கோவை தெற்கு தாலுகாவில் உள்ள மதுக்கரை, ஒத்தக்கால்மண்டபம் உள்வட்டங்களையும் சேர்த்து கிணத்துக்கடவு தாலுகா உருவாக்க வேண்டும். பொள்ளாச்சி, கோவை தெற்கு தாலுகாவை உடைத்து உருவாக்கப்பட்டும் கிணத்துக்கடவு தாலுகாவை கிணத்துக்கடவில் அமைக்க வேண்டும். அப்போது தான் கிணத்துக்கடவு பகுதிகள் வளர்ச்சியடையும். இந்த கருத்தை தான் பரிந்துரை செய்துள்ளேன். பொள்ளாச்சி வடக்கு பகுதிகளை கிணத்துக்கடவு தாலுகாவில் இணைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யவில்லை என்றார். 'ஒன்று மூன்றாகணும்' பொள்ளாச்சி எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி கூறுகையில், ''பொள்ளாச்சி தாலுகாவில் 11 உள்வட்டம் உள்ளது. கிணத்துக்கடவு, வடசித்தூர், கோவில்பாளையம் ஆகிய உள்வட்டங்களுடன் கிணத்துக்கடவை தலைமை இடமாக கொண்டு கிணத்துக்கடவு தாலுகாவும், ஆனைமலை, மார்ச்நாயக்கன்பாளையம், கோட்டூர் உள்வட்டங்களுடன் ஆனைமலையை தலைமையிடமாக கொண்டு ஆனைமலை தாலுகாவும், மீதமுள்ள ஐந்து உள்வட்டங்களை கொண்டு பொள்ளாச்சி தாலுகா செயல்படவும் பரிந்துரை செய்துள்ளேன். ஒரு தாலுகாவை மூன்றாக பிரித்தால் மக்கள் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும்'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us