Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/பாதி இடம் பொதுப்பணிக்கு; மீதி மாநகராட்சிக்கு :பட்டாவுக்கு தவிக்கும் 64 குடும்பத்தினர்

பாதி இடம் பொதுப்பணிக்கு; மீதி மாநகராட்சிக்கு :பட்டாவுக்கு தவிக்கும் 64 குடும்பத்தினர்

பாதி இடம் பொதுப்பணிக்கு; மீதி மாநகராட்சிக்கு :பட்டாவுக்கு தவிக்கும் 64 குடும்பத்தினர்

பாதி இடம் பொதுப்பணிக்கு; மீதி மாநகராட்சிக்கு :பட்டாவுக்கு தவிக்கும் 64 குடும்பத்தினர்

ADDED : செப் 01, 2011 01:44 AM


Google News

திருச்சி: பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான இடமான, ஸ்ரீரங்கம் மலட்டாறு கரையில் வசிக்கும் 64 குடும்பத்தினர் வீட்டுமனை பட்டாவுக்காக தவியாய் தவிக்கின்றனர்.

திருமஞ்சன காவிரி என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் மலட்டாற்றின் கரையில், ரெங்கா நகர் பகுதியில் உள்ள வரதாச்சாரி தெருவில் 64 குடும்பத்தினர், கடந்த 50 ஆண்டாக வசித்து வருகின்றனர்.

ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள வீடுகளின் பாதி பொதுப்பணித்துறைக்கும், மீதி இடம் மாநகராட்சிக்கும் சொந்தமானதாக இருக்கிறது. கடந்த தி.மு.க., ஆட்சியில் இம்மக்கள் பலமுறை பட்டா கோரிக்கை விடுத்து ஓய்ந்து போயினர். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்திருப்பதும், குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றதாலும், தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் என்ற புது நம்பிக்கையில் இருக்கின்றனர்.

இதுகுறித்து வரதாச்சாரி தெருவில் வசிக்கும், ஓய்வுப் பெற்ற ராணுவ வீரர் அன்பழகன் கூறியதாவது: மலட்டாற்றின் கரை என்பதால், எங்களது வீடுகள் அமைந்துள்ள இடம் ஏழு அடி வரை பொதுப்பணித்துறைக்கு சொந்தமானதாக இருக்கிறது. தெருவில் இருந்து வீடு வரை ஏழு அடி தூரம் மாநகராட்சிக்கு சொந்தமானதாக உள்ளது. இந்த இடத்துக்கு பட்டா கொடு ப்பதில் மாநகராட்சி எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

'மலட்டாற்றை ஆழப்படுத்தும்போதோ, அகலப்படுத்தும்போதோ கண்டிப்பாக உங்களது வீட்டை இடித்து விடுவோம்' என்று பொதுப்பணித்துறையினர் பயமுறுத்துகின்றனர். கடந்த தி.மு.க., ஆட்சியில் எவ்வளவு போராடியும் பயனில்லாமல் போய்விட்டது. இந்த ஆட்சியில் எங்களுக்கு பட்டா கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு பட்டா கோரி, விரைவில் எங்களது தொகுதி எம்.எல்.ஏ.,வும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு மனு அனுப்பவிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தே.மு.தி.க., 2வது வார்டு மகளிரணிச்செயலாளர் மலர்விழி கூறியதாவது: சாதாரண கூலித்தொழிலாளிகள், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களே இப்பகுதியில் வசிக்கின்றோம். பெரும்பாலான வீடுகள் குடிசை வீடுகள்தான். சிலர் குருவி சேர்ப்பதை போல பணம் சேர்த்து சிறிய அளவில் வீடுகள் கட்டியுள்ளோம். அதை எப்போது இடிப்பார்களோ? என்ற பயத்தில் தினந்தோறும் செத்துப் பிழைக்கிறோம்.

இப்பகுதியில் சாலை, மின், தெருவிளக்கு வசதி செய்து தந்த மாவட்ட நிர்வாகம், எங்களுக்கு பட்டா வழங்க மட்டும் ஏன் மறுக்கிறது? என்று தெரியவில்லை. கடந்த தி.மு.க., ஆட்சியில் பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தும், அமைச்சராக இருந்த நேருவை சந்தித்து முறையிட்டும் எங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. அதனால், எங்களது தொகுதியில் நின்ற ஜெயலலிதாவை அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தோம். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள அவர், இப்பகுதி மக்களுக்கு கருணை காட்டி, நாங்கள் வசிக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us