Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விலங்குகளுக்கான தீவன உற்பத்தியில் வண்டலூர் பூங்கா சாதனை : ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மிச்சம்

விலங்குகளுக்கான தீவன உற்பத்தியில் வண்டலூர் பூங்கா சாதனை : ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மிச்சம்

விலங்குகளுக்கான தீவன உற்பத்தியில் வண்டலூர் பூங்கா சாதனை : ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மிச்சம்

விலங்குகளுக்கான தீவன உற்பத்தியில் வண்டலூர் பூங்கா சாதனை : ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மிச்சம்

ADDED : ஆக 29, 2011 12:51 AM


Google News

வண்டலூர் : வண்டலூர் பூங்காவில், பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகளுக்கான தீவனப் புற்களை, பூங்கா நிர்வாகமே விளைவித்துள்ளது.

இதன் மூலம், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் தீவன செலவு மீதமாகும். வண்டலூர் உயிரியல் பூங்கா, 602 எக்டேர் பரப்பளவு கொண்டது. இயற்கையான வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவில், தற்போது, 1,350க்கும் மேற்பட்ட வன விலங்குகள், பறவைகள், ஊர்வனம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விலங்குகளில், காட்டெருமை, யானை, மான், நீர் யானை மற்றும் ஒட்டகச்சிவிங்கி ஆகியவை, புற்களையே தீவனமாக உட்கொள்கின்றன.



இந்த விலங்குகளுக்கு, தினசரி 1,500 கிலோ புற்கள் தேவைப்படுகிறது. இதுவரை, இந்த விலங்குகளுக்கான தீவன புற்களை மாதவரம், காட்டுப்பாக்கம் ஆகிய இடங்களிலிருந்து, கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. பசும்புற்கள் மட்டுமல்லாமல், வைக்கோலும் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு, தீவன புற்களுக்காக மட்டும் பூங்கா நிர்வாகம், 10 லட்சம் ரூபாய் செலவழித்து வந்தது. விலங்குகளுக்கு தேவையான தீவன புற்களை உற்பத்தி செய்யும் திட்டம் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. ஆனால், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால், தொடர்ந்து வெளியில் இருந்தே புற்கள் தருவிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், பூங்கா அதிகாரிகள் சிலரின் கடும் முயற்சியால், தீவன புற்கள் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட்டது.



இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது: வண்டலூர் பூங்காவை பொறுத்த வரையில், தீவன பயிர்களை உற்பத்தி செய்ய போதுமான நிலம் மற்றும் பாசன வசதி உள்ளது. எனவே தான், இத்திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்து, தற்போது 4.75 எக்டேர் பரப்பளவில், தீவன பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. நவீன தீவன புல் வகையான, கோ 4 ரகம் பயிரிடப்பட்டுள்ளது. ஓட்டேரி முனையில், 3.75 எக்டேரிலும், பூங்காவின் வடபுறத்தில் ஒரு எக்டேரிலும் தற்போது கோ 4 ரக புற்கள் விளைந்துள்ளன. தற்போது, தினசரி 3,000 கிலோ அளவிற்கு தீவன புற்களை அறுவடை செய்யலாம். இதனால், வண்டலூர் பூங்கா விலங்குகளுக்கான பசுந்தீவன உற்பத்தி தன்னிறைவடைந்துள்ளது.



மேலும், பூங்கா நிர்வாகம் தீவன புற்கள் கொள்முதலுக்காக செலவிட்ட, ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் என்பதும் மீதப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, புரதச்சத்து நிறைந்த வேலிமசால், குதிரை மசால், முயல்மசால் உள்ளிட்ட தீவன பயிர்களையும் விளைவிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



*வண்டலூர் பூங்காவின், நீர் பறவைகள் சரணாலயத்திலுள்ள மிகப் பெரிய ஏரியில் இருந்து, தீவன புற்களுக்கான பாசன வசதி கிடைக்கிறது. பறவைகளின் எச்சம் கலந்த ஏரி நீர், சிறந்த உரம் என்பதால், தீவன புற்கள் செழிப்பாக, விரைவாக வளர்கின்றன.

* தீவனப் பயிர்களை பூங்கா நிர்வாகமே உற்பத்தி செய்வதால், போக்குவரத்து செலவு குறைந்ததுடன், சுத்தமான புற்கள் விலங்குகளுக்கு கிடைக்கின்றன.

*பூங்காவிலுள்ள மரங்களிலிருந்து உதிரும் இலைகள், விலங்குகளின் எச்சங்கள், முன்பு எரிக்கப்பட்டன. தற்போது, அவை அனைத்தும் உரக்குழிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, உரமாக மாற்றப்பட்டு, தீவன புற்களுக்கு இடப்படுகின்றன. இதனால், பூங்காவின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டுள்ளது.

*வண்டலூர் பூங்காவில், விலங்குகளுக்கு தேவையான அளவிற்கும் மேல், தீவன புற்கள் உற்பத்தியாவதால், மீதத்தை கிண்டி சிறுவர் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.



மதம் பிடித்த யானையை சீராக்கும் வாழை மரம்

துணையுடன் சேராதிருத்தல், மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் யானைகளுக்கு மதம் பிடிக்கின்றன. மதம் பிடித்த யானைகளை கட்டுக்குள் கொண்டு வர, வாழை மரத்தை உணவாக கொடுக்கின்றனர். வாழை இலைகளை உண்டவுடன் யானையின் மதம் குறையுமாம். இதனடிப்படையில், வண்டலூர் பூங்காவின் பசுந்தீவன புற்கள் பயிரிட்டுள்ள இடங்களில் வாழை மரங்களும் நடப்பட்டுள்ளன. பூங்கா யானைகளுக்கு மதம் பிடித்தால், வெளியே தேடிக் கொண்டிருக்காமல் உடனடியாக வாழை மரம் கொடுக்க இந்த ஏற்பாடு.



எஸ்.உமாபதி







      Our Apps Available On




      Dinamalar

      Follow us