கிளைச்சிறைகளில் சமையல் பணியாளர் நியமனம்
கிளைச்சிறைகளில் சமையல் பணியாளர் நியமனம்
கிளைச்சிறைகளில் சமையல் பணியாளர் நியமனம்
ADDED : செப் 17, 2011 11:24 PM
ஈரோடு: தமிழகத்தில் தாலுகா கிளை சிறைகளில், புதிய சமையல்காரர்கள் நியமனத்திற்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழகத்தில் சென்னை புழல்,வேலூர்,கோவை, பாளையங்கோட்டை உள்ளிட்ட ஒன்பது மத்திய சிறைகளும், 150 தாலுகா கிளை சிறைகளும் அமைந்துள்ளன.
இந்த கிளைகளில், தலா, 30 பேர் வீதம், 4,500 பேர் விசாரணைக் கைதிகளாக வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு காலை, மதியம், இரவு நேரத்தில் உணவும், மாலை நேரத்தில் டீ மற்றும் சுண்டலும், ஞாயிறன்று கோழிக் கறியும் உணவாக வழங்கப்படுகிறது. மத்திய சிறைகளில் சமையல் செய்வதற்கு என, சமையல்காரர்களும், அவர்களுக்கு உதவிபுரிய நன்னடத்தை கைதிகளும் உள்ளனர். ஆனால், கிளைச் சிறைகளில், சிறைக்கு வரும் கைதிகளில் ஓரளவுக்கு சமைக்க தெரிந்தவர்களை கொண்டு, இப்பணி நடக்கிறது. இந்நிலையில், மத்திய சிறைகளைப் போலவே, தாலுகா கிளை சிறைகளிலும், சமையல்காரர்களை கொண்டு, உணவு சமைத்து வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, புதிதாக சமையல்காரர்களை பணி நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளது. 'கேட்டரிங் சயின்ஸ்' படித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களை, நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. 'ஓரிரு வாரத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக அழைப்பு விடப்பட்டு, தேர்வு செய்து, புதிதாக சமையல்காரர்கள், கிளைச் சிறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்' என, சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.