ADDED : செப் 19, 2011 11:55 PM
தென்காசி : கேரளாவில் நேற்று 'பந்த்' நடந்ததால் தென்காசியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரள மாநிலத்தில் பெட்ரோல் விலையை கண்டித்து நேற்று 'பந்த்' அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு கடைகள் அடைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நெல்லை மாவட்டம் புளியரை வழியே கேரளாவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். கேரள மக்களுக்கு தேவையான பால், காய்கறிகள் தினமும் புளியரை வழியே கொண்டு செல்லப்படும். தென்காசியில் இருந்து திருவனந்தபுரம், கொல்லம், சங்கனாசேரி, குருவாயூர், புனலூர் உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு பகுதிக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
'பந்த்' காரணமாக தென்காசியில் இருந்து கேரளாவிற்கு நேற்று பஸ்கள் இயக்கப்படவில்லை. கேரள அரசு போக்குவரத்து கழகம், தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படவில்லை. தென்காசி பஸ் ஸ்டாண்டில் கேரள பஸ்கள் நிறுத்துமிடம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பஸ்கள் இன்றி பயணிகள் அவதிப்பட்டனர். புளியரை அருகே லாரிகள் நிறுத்தப்பட்டதால் லாரி டிரைவர்கள் பரிதவித்தனர். மாலை 6 மணிக்கு மேல் வழக்கம் போல் கேரளாவிற்கு வாகனங்கள் சென்று வந்தன.


