ADDED : ஆக 12, 2011 02:09 AM
சென்னை:பட்டா பெயர் மாற்ற 3,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., லஞ்ச
ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.மன்னார்குடியை சேர்ந்தவர்
அமித்சிவில்.
இவர் ராயப்பேட்டை பாலாஜி நகரில் வசிக்கிறார். இவர்
திருக்கழுக்குன்றம் பூந்தண்டலத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிலம்
வாங்கினார். அந்த நிலத்தை தனது பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய கோரி,
பூந்தண்டலம் வி.ஏ.ஓ., விடம் கடந்த மாதம் மனு செய்தார். வி.ஏ.ஓ., ஸ்ரீதர்
பட்டாவை மாற்றித்தர 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இறுதியாக நடந்த
பேரத்தில் 3,500 ரூபாய்க்கு வி.ஏ.ஓ., இறங்கி வந்தார். பெயர் மாற்ற ஒரு
மாதமாக அலைகழிக்கப்பட்ட நிலையில், அமித் சிவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு
தகவல் கொடுத்தார். வி.ஏ.ஓ.,விடம் 3,500 ரூபாய் லஞ்சம் கொடுக்கும் போது
மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வி.ஏ.ஓ., ஸ்ரீதரை கையும் களவுமாக
பிடித்தனர். அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில்
அடைத்தனர்.


